மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக உதவவில்லை: மோடி குற்றச்சாட்டு!

Published On:

| By Selvam

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக அரசு உதவி செய்யவில்லை என்று பிரதமர் மோடி இன்று (மார்ச் 4) குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பாஜக சார்பில் நடைபெற்று வரும் வரும் தாமரை மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

ADVERTISEMENT

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசும்போது,

“ஒவ்வொரு முறையும் நான் சென்னை வரும்போது மிகுந்த புத்துணர்ச்சியாக இருக்கிறது. எனக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான உறவு என்பது மிகவும் பழமையானது. ஆனால், இங்கே சில ஆண்டுகளாகவே நான் தமிழ்நாட்டிற்கு வரும்போது சிலருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது. தமிழ்நாட்டில் பாஜக தொடர்ந்து வலுவடைந்து வருகிறது என்பது தான் இதற்கான காரணம்.

ADVERTISEMENT

ஒருபுறம் மத்திய அரசு தமிழ்நாடு மற்றும் சென்னையின் எதிர்காலத்திற்காக பணியாற்றி வருகிறது. ஆனால், மறுபுறம் மாநிலத்தில் அதிகாரத்தில் இருக்கும் திமுக அரசு சென்னை வாசிகளின் தேவைகளை கண்டுகொள்ளவில்லை.

சில மாதங்களுக்கு முன்பு மிக்ஜாம் புயாலால் சென்னைவாசிகளுக்கு கடுமையான துயரம் ஏற்பட்டது. ஆனால், திமுக அரசு அவதிப்படும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு பதிலாக, அவர்களை துயரத்தை மேலும் அதிகப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டது.

ADVERTISEMENT

திமுகவை சேர்ந்தவர்கள் புயலின் போது வெள்ள தடுப்பு நிவாரண பணிகளில் ஈடுபடவில்லை. மாறாக ஊடகங்களில் வெள்ள நீர் ஓடவில்லை என்கிறார்கள். திமுக அரசிற்கு மக்களின் துயரங்களை பற்றி கவலையில்லை என்பது தான் இதிலிருந்து நன்கு தெரிகிறது.

மத்திய பாஜக அரசின் பல திட்டங்களின் தொகையை நேரடியாக இங்கே பயனாளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுகிறது.  லட்சக்கணக்கான கோடி ரூபாய் ஆதாயங்கள் இப்போது நேரடியாக மக்களின் வங்கி கணக்குகளை சென்றடைகின்றன என்பது தான் திமுகவிற்கு மிகப்பெரிய வருத்தம்.

கழிப்பறை, எரிவாயு, குடிநீர், நெடுஞ்சாலைகள், துறைமுகம் என அனைத்து துறைகளிலும் பணிகள் நடந்து வருகிறது. இந்த வளர்ச்சி திட்டங்களில் லட்சக்கணக்கான கோடி ரூபாயை கொள்ளையடிக்க முடியாமல் போனது என்பது தான் திமுகவினருக்கு இருக்கும் பெரும் சிக்கல்.

இந்த விஷயத்தில் ஒரு குடும்பம் மொத்தமுமே பயங்கர எரிச்சலில் இருக்கிறது. இதனால் மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டுகிறது. நான் திமுககாரர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்,

தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு அளித்த பணத்தை கொள்ளையடிக்க விடமாட்டேன். நீங்கள் கொள்ளையடித்த பணம் மீண்டும் வசூலிக்கப்பட்டு தமிழ்நாட்டின் மக்களுக்காகவே செலவு செய்யப்படும். இது மோடியின் உத்தரவாதம்” என்று தெரிவித்தார்.

 செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ரஞ்சி கோப்பை: தமிழ்நாட்டை வீழ்த்தி… 47-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மும்பை

பிரதமர் என்றால் அண்ணன்: தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share