காவல் நிலையத்தில் இருந்த போலீசாரின் செல்போனையே களவாடிய பலே திருடனை போலீசார் இன்று (ஆகஸ்ட் 30) கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர்.
நெல்லை மாநகர் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் போலீசாரின் பயன்பாட்டிற்காக சியுஜி சிம் கார்டுடன் கூடிய மொபைல் போன்கள் வழங்கப்பட்டுள்ளது.
அப்படி நெல்லை டவுன் காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டிருந்த செல்போனுடன், நேற்று (ஆகஸ்ட் 29) இரவு பணியின் போது சிறிது நேரம் கண் அயர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளரின் செல்போனும் திடீரென மாயமானது.
சிறிது நேரத்தில் கண் விழித்து பார்த்தபோது டேபிளில் இருந்த இரண்டு செல்போன்களும் காணாமல் போனதை கண்டறிந்த சிறப்பு எஸ்.ஐ., மறந்து வேறு எங்கும் வைத்து விட்டோமா என காவல் நிலையத்தை சல்லடை போட்டு தேடியுள்ளார் .
ஆனாலும் செல்போன்கள் கிடைக்கவில்லை. எனவே அவை திருடு போனது என்பதும், ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்பதும் பின்னர் தெரியவந்தது.
வேறு வழியின்றி இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு எஸ்.ஐ தகவல் அளித்தார். அதன் அடிப்படையில் காவல் நிலையத்திலிருந்து செல்போன்கள் திருடு போனதா அல்லது வேறு எங்கேயும் விழுந்ததா என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும் இரவில் விசாரணைக்கு வந்த நபர்கள் யாரும் செல்போன்களை திருடி சென்று விட்டனரா என்ற கோணத்தில் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளும் ஆராயப்பட்டது.
மக்களின் உடைமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் காவலர்களின் அலுவலகத்திலேயே நடந்த இந்த திருட்டு சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் தீவிர விசாரணைக்கு பிறகு செல்போன் திருடனை போலீசார் இன்று கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்தவர் இப்ராகிம். இவர் டவுண் பகுதியில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு மாதமாக அவருக்கு கடையில் சம்பளம் கொடுக்காததால் அது குறித்து நள்ளிரவு புகார் செய்வதற்காக காவல் நிலையம் வந்துள்ளார்.
அப்போது இரவு பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததையும், அவரது மேஜையில் இரண்டு செல்போன்கள் இருப்பதையும் இப்ராஹிம் கண்டுள்ளார்.
புகார் கொடுக்க வந்த ஞாபகம் மறந்து, இரண்டு செல்போன்களையும் எடுத்து செல்ல திட்டமிட்டுள்ளார்.
தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை அறிந்து கொண்டு, எஸ்.ஐ மேஜையில் இருந்த இரண்டு செல்போன்களையும் நைசாக எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் காவல் நிலையம் மற்றும் அருகில் இருந்த பிற கடைகள் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில், இப்ராஹிமை கையும் களவுமாக கைது செய்த போலீசார், அவரிடமிருந்து இரண்டு செல்போன்களையும் கைப்பற்றினர்.
சம்பளம் பாக்கியை வசூல் செய்து தரும்படி புகார் அளிக்க வந்த இடத்தில், காவல் நிலையம் என்றும் தெரிந்தும் செல்போன்களை திருடிய இப்ராகிமின் செயல் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
சரவணன்
பிரதமர் பதவி யாருக்கு?: இந்தியா கூட்டணி குறித்து உத்தவ் தாக்கரே
பெண்களுக்கு மாதம் ரூ.1000 : போஸ்டல் பேமெண்ட்ஸ் கணக்கு தொடங்குவது எப்படி?
