ஆதார் கார்டு தொடர்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனி ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை ஆன்லைனிலேயே மாற்றிக்கொள்ளலாம். இதற்காக புதிய ஆதார் செயலி (Aadhaar App) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இனி ஆதார் மையத்திற்கு செல்லாமலேயே மொபைல் எண்ணை மாற்றிக்கொள்ள முடியும். இது ஆதார் சேவைகளில் ஒரு பெரிய மாற்றமாகும்.
முன்பெல்லாம், மொபைல் எண்ணை மாற்ற ஆதார் மையத்திற்கு நேரில் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் இப்போது, புதிய ஆதார் செயலியில் ‘Mobile Number Update’ என்ற வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி, ஆதார் செயலியின் ‘update’ பிரிவில் உள்ளது. இது ஆதார் பயனர்களுக்கு பெரும் வசதியை அளிக்கிறது. ஏனெனில், பெரும்பாலான ஆன்லைன் சேவைகளுக்கு OTP (One Time Password) மூலம் ஆதார் எண்ணை சரிபார்க்க மொபைல் எண் அவசியம்.
மொபைல் எண்ணை ஆன்லைனில் மாற்றும் வசதி செயல்படுத்தப்பட்டாலும், பெயர், மின்னஞ்சல் முகவரி, முகவரி போன்ற பிற முக்கிய விவரங்களை மாற்றும் வசதிகள் இன்னும் செயலில் வரவில்லை. இந்த வசதிகள் செயலியின் ‘demographic updates’ பிரிவில் காட்டப்பட்டாலும், அவை “This feature is coming soon, it is in development phase!” என்று காட்டுகின்றன. அதாவது, இந்த வசதிகள் விரைவில் படிப்படியாக செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, பிறந்த தேதியை மாற்றும் வசதி ஆதார் செயலியில் சேர்க்கப்படவில்லை. மற்ற வசதிகள் “coming soon” என்று காட்டப்படும் நிலையில், பிறந்த தேதியை மாற்றும் வசதி செயலியிலேயே இல்லை. UIDAI இதை பின்னர் செயல்படுத்துமா என்பது தெரியவில்லை. பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். கைரேகை, கண் விழி போன்ற பயோமெட்ரிக் மாற்றங்களுக்கு ஆதார் மையத்துக்கு நேரில் செல்ல வேண்டும். ஏனெனில், கைரேகை, கண் விழி பதிவு, புகைப்படம் போன்ற பயோமெட்ரிக் விவரங்களை ஆன்லைனில் மாற்ற முடியாது. இந்த மாற்றங்களுக்கு நேரடி சரிபார்ப்பு தேவைப்படுவதால், பயனர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஆதார் மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டும்.
பல ஆண்டுகளாக, ஆதார் எண்ணில் ஆன்லைனில் மாற்றக்கூடிய ஒரே விவரம் முகவரி மட்டுமே. புதிய ஆதார் செயலி மூலம், பயோமெட்ரிக் விவரங்களைத் தவிர மற்ற அனைத்து முக்கிய விவரங்களையும் ஆன்லைனில் மாற்ற UIDAI தயாராகி வருகிறது. தற்போது மொபைல் எண் மாற்றும் வசதி மட்டுமே செயலில் உள்ளது. மற்ற வசதிகள் வந்த பிறகு, ஆதார் பயனர்களுக்கு அதிக சுதந்திரமும் வசதியும் கிடைக்கும்.
புதிய ஆதார் செயலி அடையாள சரிபார்ப்பை எளிமையாகவும், பாதுகாப்பாகவும், தனியுரிமைக்கு உகந்ததாகவும் மாற்ற வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ‘Offline Verification’ மூலம் செயல்படுகிறது. இதனால், ஆதார் நகல்களைப் பகிர வேண்டிய அவசியம் குறையும். இணைய இணைப்பு இல்லாமலேயே பாதுகாப்பாக அடையாளத்தை சரிபார்க்கலாம்.
UIDAI-ன் இந்த புதிய முயற்சி, ஆதார் சேவைகளை மக்களுக்கு மேலும் எளிமையாகவும், அணுகக்கூடியதாகவும் மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
