திமுகவில் இணைந்த ஆலங்குளம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., மனோஜ் பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தமிழ்நாட்டு அரசியலில் திடீர் திருப்பமாக, ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன், இன்று (நவம்பர் 4) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். திமுகவில் இணைந்த சில நிமிடங்களிலேயே, தனது ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார்.
மனோஜ் பாண்டியனின் இந்த அதிரடி முடிவுக்கு அதிமுக தரப்பிலிருந்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. அதிமுக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன், மனோஜ் பாண்டியனின் செயலை “நன்றிக்கேடானது” என்று கடுமையாகச் சாடினார். “மனோஜ் பாண்டியன் நன்றி மறந்து பஞ்சம் பிழைக்க போயிருக்கிறார்,” என்றும், அவரது அரசியல் வாழ்க்கை “பரிதாபகரமான கட்டத்தில்” இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொங்கலூர் மணிகண்டன் போன்றோரும் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்ததற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மாலையில் தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவைச் சந்தித்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கினார் மனோஜ் பாண்டியன். அதனை சபாநாயகர் அப்பாவு பெற்றுக்கொண்டார்.
