கடலூர் மாவட்டத்துக்கான முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (பிப்ரவரி 21) வெளியிட்டார். mkstalin super schemes cuddalore
அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக கடலூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, பொதுமக்கள் வழிநெடுகிலும் எழுச்சியுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் சாலையில் நீண்ட தூரம் நடந்து சென்று பெண்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த உற்சாக வரவேற்பினை ஏற்றுக் கொண்டு, அவர்களுடன் உரையாடி, பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

கடலூர், மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், மு.க. ஸ்டாலின் கடலூர் மாவட்டத்தில் 704 கோடியே 89 லட்சம் ரூபாய் செலவில் 602 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.
384 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 178 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 386 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 44,689 பயனாளிகளுக்கு வழங்கினார்.
ஒவ்வொரு மாவட்டத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் போதும் அந்தந்த மாவட்டத்துக்கான முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார்.

அதன் படி கடலூர் மாவட்டத்துக்கு அவர் வெளியிட்ட அறிவிப்பில், “கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பை தடுக்க தென்பெண்ணை ஆற்றில் ஆற்றில் 58 கோடி மதிப்பீட்டில் வெள்ள தடுப்பு பணிகள் நடைபெறும்.
கடலூர் மாநகராட்சியில் மஞ்சகுப்பம் மைதானம் சுற்றி பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் மேம்படுத்தப்படும்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் கோரிக்கை வைத்தது போல் பண்ருட்டி தொகுதியில் அரசு அறிவியல் கலை கல்லூரி அமைக்கப்படும்.
திட்டக்குடி மற்றும் விருத்தாச்சலம் பகுதியில் இருக்கும் வேளாண் பெருமக்கள் பயனடையும் வகையில் வெலிங்டன் எதிரில் கரைகளை பலப்படுத்துவது, வாய்க்காலை புனரமைப்பது போன்ற மேம்பாட்டு பணிகள் 130 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
கடலூர் மாநகராட்சியில் இருக்கும் மஞ்சக்குப்பம் மைதானம் மற்றும் சுற்றி இருக்கக்கூடிய பகுதியில் 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்படும்.
குமரகிரி மற்றும் சிதம்பரம் பகுதி மக்களுக்கு பயனளிக்கும் வகையில் முட்லூரில் இருந்து சேத்தியாதோப்பு வரை உள்ள இரண்டு வழி சாலை நான்கு வழிச்சாலையாக 50 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

நெய்வேலி பகுதியில் கெடிலம் ஆற்றங்கரையில் செம்மேடு, சிறுவத்தூர், எலந்தம்பட்டு கிராமங்களில் 36 கோடி ரூபாய் செலவில் வெள்ள தடுப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
திருவந்திபுரம் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் எம். புதூர் முதல் திருவந்திபுரம் வரை உள்ள சாலை 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
குறிஞ்சிபாடியில் புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் ஆறு கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி பகுதிகளுக்கு விவசாயிகளின் விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான பாசன ஆதாரமாக விளங்கும் வீராணம் ஏரி மேம்படுத்தப்படும். 63 கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்,
தாய் மொழி தமிழைக் காக்க தன் உயிரை நீத்த மாணவர் ராஜேந்திரனின் நினைவிடம் புதுப்பிக்கப்படும்” என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.