ஓய்வுபெற்ற எஸ்.ஐ ஜாஹீர் உசேன் கொலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 19) கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு ஸ்டாலின் பதில் அளித்தார். mkstalin strong message to nellai retired si murder case
ஓய்வு பெற்ற காவல் அதிகாரியான ஜாஹீர் உசேன் நெல்லை டவுன் தடிவீரன் கோயில் தெருவில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை ரம்ஜான் நோன்பு தொழுகை முடிந்து வீட்டுக்கு சென்ற அவரை மர்ம கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொன்றது.
இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஜாஹீர் உசேன் கொலைத் தொடர்பாக சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் இன்று கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.
காவல்துறையின் மிக மோசமான செயல்பாடு! mkstalin strong message to nellai retired si murder case
அப்போது அவர், ”ஜாஹீர் உசேன் தனது உயிருக்கு ஆபத்து என்று மூன்று மாதங்களுக்கு முன்னேரே கூறியுள்ளார். இதுதொடர்பாக நெல்லை காவல் ஆணையர், டவுண் காவல் ஆய்வாளரிடமும் புகார் அளித்துள்ளார். ஆனால் அதிகாரிகள் அதனை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் ஏற்கெனவே தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், தான் விரைவில் கொல்லப்படுவேன் என்பது குறித்தும் வீடியோவில் பேசியுள்ளார். இந்த நிலையில் நேற்று அவர் கொல்லப்பட்டதன் மூலம் காவல்துறையின் செயல்பாடு மிக மோசமான நிலையில் உள்ளது என்பது தெரிய வருகிறது.
மேலும் ரமலான் மாதத்தில் ஏற்பட்டுள்ள இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு அதிமுக சார்பில் எனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என எடப்பாடி பேசினார்.
குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்! mkstalin strong message to nellai retired si murder case
தொடர்ந்து கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “நெல்லையில் நேற்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்ட ஜாஹீர் உசேனின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் நெல்லை டவுண் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் இருவர் மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், மற்ற எதிரிகளை தனிப்படை அமைத்து காவல்துறை தேடி வருகிறது.
மறைந்த ஜாஹீர் உசேனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற தெளபீக் என்பவருக்கும் நிலம் தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது. இதில் இரு தரப்பினரும் மாறி மாறி காவல்நிலையத்தில் புகாரளித்தனர். ஜாஹீர் உயிருக்கு ஆபத்து என்று வீடியோ வெளியிட்டதன் பேரில், குறிப்பிட்ட எதிர்தரப்பினரை காவல் நிலையத்திற்கு அழைத்து போலீசார் விசாரித்து வந்தனர்.
இதற்கிடையே தான் நேற்று கண்டிக்கத்தக்க இந்த சம்பவம் நடந்துள்ளது. இக்கொலை வழக்கில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்” என்று ஸ்டாலின் பேசினார்.