பள்ளி கல்விக்கான மாநில கல்வி கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 8) வெளியிட்டார்.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்து மாநில கல்விக் கொள்கையை உருவாக்க கடந்த 2022-ம் ஆண்டு ஓய்வு பெற்ற டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இதனையடுத்து மாநில கல்விக் கொள்கைக்கான 650 பக்க வரைவு அறிக்கை கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், முதல்கட்டமாக பள்ளிக்கல்வித் துறைக்கான மாநில கல்விக் கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை வெளியிட்டார்.
தொடர்ந்து விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், “தேசிய கல்விக் கொள்கை 2020 என்று வெளியிட்டார்கள். ஆனால் ’எங்கள் பிள்ளைகளுக்கு என்ன வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்’ என்று கூறி, முன்னாள் நீதிபதி தலைமையில் கல்வியாளர்களை வைத்து, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் கருத்துகளை கேட்டு இந்த மாநில கல்விக் கொள்கையை உருவாக்கியிருக்கிறோம்.
கல்வியும், சுகாதாரமும் எனது இரு கண்கள் என தொடர்ந்து சொல்லிக் கொண்டே வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதை செயலாகவும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் மாநில கல்விக் கொள்கையை வெளியிடும் இந்த நாளை கல்வி புரட்சியின் நாளாக நான்n கருதுகிறேன்” என அன்பில் மகேஷ் பேசினார்.
