சென்னையில் இன்று (ஜூலை 29) நடைபெற்ற அண்ணா பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் கருத்தை மாணவர்களுக்கு நினைவூட்டி முதல்வர் ஸ்டாலின் ஊக்கமளித்தார்.
அண்ணா பல்கலையின் 42ஆவது பட்டமளிப்பு விழா சென்னையில் உள்ள அண்ணா பல்கலை வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில், முதன்மை விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ரவி, இணை வேந்தரும், உயர்கல்வித் துறை அமைச்சருமான பொன்முடி ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “மாணவர்களுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பேசியதை சுட்டிக்காட்டி பட்டம் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கமூட்டினார். இந்த பட்டத்தோடு உங்கள் படிப்பு முடிந்து விடுவதில்லை. அந்த பட்டத்தை தாண்டி உயருங்கள். பட்டம் என்பது வேலைவாய்ப்புக்காக மட்டுமல்ல. உங்கள் அறிவாற்றலை மேம்படுத்துவதற்காக என்பதையும் மறந்து விட கூடாது. அறிவாற்றல் தான் அனைத்திலும் பெருமையானது என்பதை உயருங்கள். சாதி, மதம், பதவி, அதிகாரம், வயது, அனுபவம், வளர்ச்சி இவை அனைத்தும் ஆளுக்கு ஆள், நாட்டுக்கு நாடு மாறுபடும். ஆனால் அறிவு மட்டும் தான் அனைத்தையும் கடந்து ஒரே அளவில் அளவிடப்படுகிறது.
இந்த வேளையில், காஞ்சியில் பிறந்த வள்ளுவர் அறிஞர் அண்ணா, மதுரை காமராஜர் பட்டமளிப்பு விழாவில் பேசியதை உங்களுக்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன். ”இந்த பட்டம் யாருக்காக? உங்களுக்காகவா? உங்களுக்காக மட்டுமல்ல நாட்டுக்காக.. பட்டம் பெற்ற நீங்கள் தான் இந்நாட்டின் திருவிளக்கு. நாட்டை செழிக்கச் செய்யக்கூடிய வல்லுநர்கள் நீங்கள் தான். தமிழ் உங்களது முரசு. பண்பாடு நமது கவசம். அறிவு உமது படைக்கலன். அறநெறி உமது வழித்துணை. உறுதியுடன் செல்வீர். ஊக்கமுடன் பணிபுரிவீர். ஏற்றமிகு வெற்றியினை ஈட்டுவீர் என்று பேரறிஞர் அண்ணா சொன்னதையே உங்களுக்கு நினைவூட்டுகிறேன் என்று கூறினார்.
கிறிஸ்டோபர் ஜெமா
