சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டி இன்று (ஏப்ரல் 14) அவரது மணிமண்டபத்தில் உள்ள படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். mkstalin pays respect on ambedkar 135th birthday
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி அவருக்கு தலைவர்கள் பலரும் புகழாரம் சூட்டி வருகின்றனர். மேலும் அவரது திருவுருவ சிலைக்கு தலைவர்கள் பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் இன்று காலை மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் திமுக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
அம்பேத்கரின் பிறந்தநாளான சமத்துவ நாளில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி. ராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில், 44 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் தரை மற்றும் 10 தளங்களுடன் 484 மாணவர்கள் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின கல்லூரி மாணவர்களுக்கான புதிய விடுதிக் கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.