கேரளா மாநிலம் பம்பையில் வரும் செப்டம்பர் 20 அன்று திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் பவள விழா நிகழ்ச்சியான “லோக ஐயப்ப சங்கமம்” நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன், கேரளா மாநில துறைமுகம், தேவசம், கூட்டுறவுத் துறை அமைச்சர் வி.என். வாசவன் மூலமாக தமிழ்நாடு முதல்வருக்கு கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் எந்த பதிலையும் தெரிவிக்காத நிலையில், பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் இருவரும் இந்து மதத்தையும், சபரிமலையின் புனித மரபுகளையும் அவமதித்ததாக அம்மாநில பா.ஜ.க. தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் குற்றம்சாட்டினார்.
மேலும் இந்நிகழ்வை மக்களை முட்டாளாக்கும் நாடகம் என்று விமர்சித்த சந்திரசேகர், இந்துகளையும், ஐயப்ப பக்தர்களையும் அவமதித்ததற்காக 2 முதல்வர்களும் பகிரங்கமாக மன்னிப்புகேட்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

அதே போன்று முன்னாள் ஆளுநரான தமிழிசை செளந்தரராஜனும் இதுதொடர்பாக இன்று கடும் எதிர்ப்பினை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் முன்னரே முடிவு செய்த நிகழ்ச்சியால் லோக ஐயப்ப சங்கமத்தில் தன்னால் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலை’ என கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் முன்னரே முடிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் காரணமாக திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் பவள விழாவில் தான் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலை உள்ளது என்றும், இவ்விழாவில், தமிழ்நாடு அரசின் சார்பில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்பார்கள் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
