தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 24) தொடங்கி வைத்தார். mkstalin inagurates cm medical shop
கடந்த ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘முதல்வர் மருந்தகம்” என்ற திட்டம் தொடங்கப்படும். அதன்மூலம், பொதுமக்களுக்கு, குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க வழிவகை செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.
அதன்படி தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக ஆயிரம் இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சென்னை தியாகராய நகர் செளந்தரபாண்டியனார் அங்காடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று திறந்து வைத்தார். பின்னர் நோயாளிகளுக்கான மருந்துகள் விற்பனையையும் தொடங்கி வைத்தார்.
இதே போன்று தமிழ்நாடு முழுவதும் தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் அமைக்கப்பட்டுள்ள 1000 மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மதுரையில் 52, கடலூரில் 49, கோவையில் 42, தஞ்சாவூரில் 40, சென்னையில் 33, திருநெல்வேலியில் 31 என தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இங்கு மருந்துகளின் சந்தை விலையை விட குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும். மேலும் 1500 பி.பார்ம் மற்றும் டி.பார்ம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
இதுதொடர்பாக நேற்று பேட்டியளித்த மருத்துவரும், திமுக எம்.எல்.ஏ.வுமான எழிலன் கூறுகையில் “முதல்வர் மருந்தகத்தில் மொத்தம் 762 வகையான மருந்துகள் கிடைக்கும். பொதுமக்களின் மருத்துவச் செலவு சுமார் 75 சதவிகிதம் வரை குறையும். நீரிழிவு நோய்க்கான METFORMIN எனப்படும் மருந்து, தனியாரில் 70 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், முதல்வர் மருந்தகத்தில் வெறும் 11 ரூபாய்க்கு கிடைக்கும்.
இதே போன்று, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்டவைகளுக்கு, மாதந்தோறும் மருந்து வாங்க தனியாரில் 3 ஆயிரம் ரூபாய் செலவாகும் பட்சத்தில், அதே மருந்துகளை முதல்வர் மருந்தகத்தில் ஆயிரம் ரூபாய்க்குள் வாங்க முடியும்.

பிரதமரின் மக்கள் மருந்தகத்திற்கு, மருந்துகள் வர, இரண்டு வாரங்கள் வரை ஆகிறது. ஆனால் முதல்வர் மருந்தகத்தில் 48 மணிநேரத்திற்குள், கிடங்குகளில் இருந்து மருந்துகள் சென்று விடும்.
பிரதமரின் மக்கள் மருந்தகங்களுக்கு ஆரோக்கியமான போட்டியாக முதல்வர் மருந்தகம் இருக்கும்” என எழிலன் தெரிவித்தார்.