தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 4) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வு தமிழ்நாட்டின் மின்சார வாகன உற்பத்தி துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
வியட்நாமின் முன்னணி மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான வின்ஃபாஸ்ட் ரூ.16,000 கோடி செலவில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி – மதுரை புறநகர் சாலையில் சில்லாதத்தம் சிப்காட் பகுதியில் ஆலை அமைக்க 408 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு இந்த தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார்.
முதல் கட்டமாக ரூ.1119.67 கோடியில் 114 ஏக்கர் பரப்பில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்சார கார் உற்பத்தி ஆலையில் வி.எப்-6, வி.எப்-7 வகை கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று தூத்துக்குடி சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த கார் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து முதல்வர் தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள மாணிக்கம் மஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் பல நிறுவனங்களுடன் தொழில் முதலீடுகள் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.
