ADVERTISEMENT

முதலமைச்சர் கோப்பை : கலைஞரை நினைவு கூர்ந்து உதயநிதியை பாராட்டிய ஸ்டாலின்

Published On:

| By christopher

mkstalin congratulates udhayanithi on cm cup stage

2025ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகள் நிறைவு விழா கொண்டாட்டம் சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று (அக்டோபர் 14) நடைபெற்றது.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத் திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் ஆண்கள், பெண்களுக்காக தனித்தனியாக 37 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

மொத்தம் 13 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் 109 தங்கப்பதக்கம், 90 வெள்ளி, 82 வெண்கலம் என 281 பதக்கங்களுடன் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதற்கு அடுத்ததாக 36 தங்கம், 22 வெள்ளி, 30 வெண்கலம் என 88 பதக்கங்களுடன் செங்கல்பட்டு அணி 2வது இடமும், 33 தங்கம், 27 வெள்ளி, 35 வெண்கலம் என மொத்தம் 95 பதக்கங்களுடன் 3வது இடமும் வென்றது.

நிறைவு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்ற அணிகள், வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கி கெளரவித்தார்.

ADVERTISEMENT

பின்னர் விழாவில் அவர் பேசுகையில், “தமிழ்நாட்டு விளையாட்டுத்துறையின் பொற்காலமாக திராவிட மாடல் ஆட்சி இருக்கிறது. தேசிய போட்டியாக இருந்தாலும், சர்வதேச தொடராக இருந்தாலும் போட்டிகளை நடத்துவதில் தமிழகம் உயர்தரமாக உள்ளது.

தமிழ்நாடு மாதிரி வேறு எந்த மாநிலமும் விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு உதவி செய்து இருக்கமாட்டார்கள் என்று பெருமையாக நெஞ்சை நிமிர்த்தி நான் சொல்கிறேன்.

ADVERTISEMENT

இந்த விளையாட்டால் தமிழகம் வாங்கி இருக்கும் சில விருதுகளை மட்டும் இங்கே சொல்கிறேன். சிஐஐ அமைப்பு சார்பில் எஸ்டிஏடி விளையாட்டு வணிக விருது 2023 வழங்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு தி இந்து ஸ்போர்ட்ஸ் ஸ்டார் ஏசஸ் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. ஜெம் அவார்ட்ஸ் 2025 வழங்கப்பட்டுள்ளது. செஸ் சாம்பியன் குகேசுக்கு கேல் ரத்னா விருது கிடைத்துள்ளது. 2024ம் ஆண்டு அர்ஜூனா விருது 4 விருதுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இப்படி எத்தனை விருதுகள் தமிழ்நாட்டை தேடி வந்தாலும், நாங்கள் பெரியதாய் நினைக்கும் விருது எது தெரியுமா? தமிழ்நாட்டில் விளையாட்டை Career – ஆக எடுத்து நிச்சயம் நம்மால் சாதிக்க முடியும் என்று அரசு திட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து இவ்வளவு ஆயிரம் பேர் போட்டியில் பங்கெடுக்கிறார்களே உங்களின் நம்பிக்கை தான் எங்களுக்கான பெரிய விருதாக அமைந்துள்ளது.

விளையாட்டுகளை வளர்க்க, திறமையான வீரர்களை கண்டறிந்து ஊக்குவிக்க, உரிய அங்கீகாரம் வழங்க 37 கோடி ரூபாய் பரிசுத்தொகையுடன் இந்த முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை நடத்தியிருக்கிறோம்.

அண்மையில் இந்த நேரு உள்விளையாட்டு அரங்கில் கல்வியாளர் தமிழ்நாட்டுக்கு பெருமை தேடி தரும் மாணவர்களை பாராட்ட ‛கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற நிகழ்ச்சியை நடத்தினோம். அப்போது கல்வியால் சிறந்த மாணவர்கள் மட்டும் இல்லை. விளையாட்டால் உயர்ந்த மாணவர்களும் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

காது கேளாதவர்களுக்கு ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கப்பதக்கங்களை வென்ற 2022ல் அர்ஜூனா விருது பெற்ற ஜெர்லின் அவர்களின் தந்தை தமிழ்நாடு அரசு எந்த அளவுக்கு அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது என்று பெருமையாக பேசினார்.

அதேபோல் போல்வால்ட் விளையாட்டில் தேசிய அளவில் தொடர்ந்து சாதனை படைத்த ரோசி என்ற வீராங்கனை ஒரு போல்ட் வாங்க ஒன்றரை லட்சம் வாங்க தேவைப்படும். என்னிடம் அவ்வளவு காசு இல்லையே என்று சொன்ன நேரத்தில் அரசு தான் எல்லா சப்போர்ட்டையும் செய்தது. இப்போது அவரிடம் 6 போல்ட் இருப்பதோடு, ரயில்வே துறையில் தனக்கு தரப்பட்ட வேலையை விட 3 மடங்கு சம்பளத்தோடு தமிழ்நாடு அரசு வேலை கொடுத்து உள்ளது என்று பெருமையோடு சொன்னார்.

சென்னை காசிமேட்டைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரின் மகள் கேரம் வீராங்கனை காசீம் என்ன பேசினார் என்று உங்களுக்கே தெரியும். அமெரிக்காவில் உலககோப்பை போட்டியில் 3 தங்கப்பதக்கம் வென்ற அவருக்கு ரூ.1 கோடியை வழங்கியது திராவிட மாடல் அரசு. இப்படி நம்மை பொறுத்தவரையில் ஜெர்லின், ரோசி மீனா, காசீம் போன்றவர்களின் எளியவர்களின் வெற்றி தான் நமது அரசின் வெற்றி. இதனால் தான் பல்வேறு திட்டங்களின் வழியாக ஏழை வீரர்களின் கனவை தமிழ்நாடு விளையாட்டு துறை இன்று நிறைவேற்றி வருகிறது.

இந்த நேரத்தில் தலைவர் கலைஞர் சொன்ன விஷயம் நினைவுக்கு வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் நான் அமைச்சராக இருந்தபோது உள்ளாட்சித் துறையில் செய்த பல சாதனைகளை பட்டியலிட்டு, ‘உள்ளாட்சித் துறையின் அமைச்சராக நான் இருக்கலாம்’ என நினைக்கிறேன் என விழா ஒன்றில் தலைவர் கலைஞர் கூறினார்.

அதேபோல விளையாட்டு துறையை நானே கவனிக்கலாம்னு ஏக்கம் எனக்கு இப்போது வந்துள்ளது. அதற்கு துணை முதலமைச்சர் உதயநிதியின் பணிகள்தான் காரணம். தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள் இன்னும் இன்னும் வெற்றிகளை குவிக்க வேண்டும் என்று மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன்

தமிழக வீரர்கள் வெற்றிமேல் வெற்றிகளை குவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு காரணமாக பயிற்சியாளர்களுக்கு பாராட்டுக்களையும், வாழ்ததுகளையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” என ஸ்டாலின் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share