திமுக எம்.பி செந்தில்குமார் சர்ச்சை கருத்து… கண்டித்த முதல்வர் ஸ்டாலின்

Published On:

| By christopher

mkstalin condemns dmk mp senthilkumar

mkstalin condemns dmk mp senthilkumar

அண்மையில் வெளியான 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது.

இதன்மூலம், மொத்த வட மற்றும் மத்திய இந்திய மாநிலங்களில் பாஜக ஆட்சியமைத்த நிலையில், இந்தி நிலத்தை கைப்பற்றிவிட்டதாக, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் முதல் கடைநிலை தொண்டர்கள் வரை கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.

மறுபுறத்தில், தென்னிந்திய மாநிலமான தெலுங்கானாவில் மீண்டும் ஒரு படுதோல்வியை பாஜக சந்தித்தது. அம்மாநிலத்தில், காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

இதன்மூலம், தென்னிந்தியாவில் எந்த மாநிலத்திலும் பாஜக ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரில் பேசிய திமுக எம்.பி செந்தில்குமார், “இந்தி நிலத்தில் மட்டுமே பாஜக வெற்றிபெற்றுள்ளது. தென் மாவட்டங்களில் உங்களால் ஒருநாளும் நுழைய முடியாது”, என தெரிவித்தது மட்டுமின்றி, அந்த 3 மாநில தேர்தல் வெற்றியை விமர்சிக்கும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய வார்த்தையையும் பயன்படுத்தினார்.

மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்!

இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில், தான் அந்த வார்த்தையை பயன்படுத்தியதற்காக எம்.பி செந்தில்குமார் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து X தளத்தில் அவர் வெளியிட்ட ஒரு பதிவில், “சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த நான், தகாத முறையில் ஒரு வார்த்தையை பயன்படுத்தினேன்.

அந்த வார்த்தையை நான் எந்த ஒரு உள்நோக்கத்துடனும் பயன்படுத்தவில்லை. அந்த வார்த்தை தவறான பொருள் தருவது என்பதால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்”, என குறிப்பிட்டுள்ளார்.

எம்.பி.யை கண்டித்த முதல்வர்

இதை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், தவறான பொருள் கொள்ளத்தக்க சொல் ஒன்றைப் பயன்படுத்தி இருந்தார்.

அதை அறிந்த திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், செந்தில்குமாரைக் கடுமையாகக் கண்டித்தார்” என ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பொதுவெளியில் கருத்துகளை தெரிவிக்கும்போது, நாகரிகத்தையும் பண்பாட்டையும் காக்கும் வகையில் அனைவரும் நடந்துகொள்ள வேண்டும் என்றும், அகில இந்தியப் பிரச்சினைகள் பற்றி கருத்து சொல்லும்போது, தனிப்பட்ட முறையிலான கருத்துகளை சொல்வதை தவிர்க்குமாறும், திமுக நிர்வாகிகளை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக, சனாதன தர்மம் குறித்து இது போன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்து, இதுபோன்று நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாக வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மகிழ்

இன்று முதல் அனைத்து புறநகர் ரயில்களும் இயங்கும்!

வேலைவாய்ப்பு: சென்னை இஎஸ்ஐசி மருத்துவமனையில் பணி!

mkstalin condemns dmk mp senthilkumar

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share