அரசு ஆவணங்கள் மற்றும் புழக்கத்தில் இருந்து ‘காலனி’ என்ற சொல்லை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தது பல்வேறு கட்சியினரின் வரவேற்பை பெற்றுள்ளது. mkstalin announced the erase the word of colony
தமிழக சட்டப்பேரவையில் நேற்றும் இன்றும் (ஏப்ரல் 29) காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
அதில் நேற்று பேசிய விசிக எம்.எல்.ஏ சிந்தனை செல்வன், காலனி என்ற சொல்லை அரசு ஆவணங்களில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார்.
அதற்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பேசுகையில், “விசிக உறுப்பினர் சிந்தனை செல்வன் மற்றும் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் பதவி உயர்வில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
அதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் பல்லாண்டு காலமாக அரசு பணியாளர் தேர்வு முறையில் தயாரிக்கப்பட்டு வந்த தரவரிசை முறையானது சமூகநீதி அடிப்படையில் இருந்து வந்தது. ஆனால் கடந்த 2019ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால் சிக்கல் எழுந்தது. எனவே தீர்ப்பால் அதில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யவும், அதற்கு தீர்வு அளித்திடவும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும். அந்த குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் நல்லத் தீர்வு காணப்படும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் ஒரு முக்கியமான அறிவிப்பாக, இந்த மண்ணின் ஆதிக்குடிகளை இழிவுபடுத்தும் அடையாளமாக காலனி என்ற சொல் பதிவாகி இருக்கிறது. ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமையின் குறியீடு சொல்லாக மாறி இருப்பதால், காலனி என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்தும், பொது புழக்கத்தில் இருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என ஸ்டாலின் அறிவித்தார்.
இனி சமூக நீதி என்றால் ஸ்டாலின் தான்! mkstalin announced the erase the word of colony
இதை வரவேற்று பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை, ”காலனி என்ற பெயர் நீக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பிடல் காஸ்ட்ரோவின் க்யூபாவில் காலனியையும் ஊரையும் ஒன்றாக சேர்த்தார். காலனி என்ற பெயரை நீக்கிய அதே நேரத்தில் காலனி என்ற பெயருக்கு பதிலாக இலக்கியத்தில் உள்ள பெயரை வைக்க வேண்டும்” என்று புதிய கோரிக்கை வைத்தார்.
இதனைத் தொடர்ந்து விசிக உறுப்பினர் சிந்தனை செல்வன் பேசுகையில், ”முதல்வர் அறிவித்துள்ள இந்த நாள் வாழ்நாளில் பொன் நாள். இந்த நாள் சமூக நீதியின் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள். இனி சமூக நீதி என்றால் ஸ்டாலின், சமத்துவம் என்றால் ஸ்டாலின், சகோதரத்துவம் என்றால் ஸ்டாலின் என்று காலம் செல்லும் என்று மனம் நிறைந்து தெரிவிக்கிறேன். விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.