கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு மீதான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு சட்டமன்றத்தில் இன்று (ஜூன் 21) பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கூடுதல் நிவாரணம் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட 150க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் இதுவரை சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் 100க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் சட்டமன்ற கூட்டத்தொடரில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதில் பல்வேறு கட்சி எம்.எல்.ஏக்கள் கருத்து தெரிவித்தனர்.
புதுச்சேரியில் இருந்து கள்ளச்சாராயம்!
அதற்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்டாலின் பேசுகையில், “கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பறிபோன உயிர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல். மெத்தனால் கலந்து சாராயத்தை அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் ஏற்கனவே உள்ள 161 மருத்துவர்களோடு கூடுதல் மருத்துவர்கள் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 164 நபர்களில் 117 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். 47 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்கள்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்போது 66 பேர், சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 32 பேர், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2 பேர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 16 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
புதுச்சேரியில் இருந்து கள்ளச்சாராயம் கொண்டு வரப்பட்டுள்ளது காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சாராயம் விற்றவர்களிடம் இருந்து சுமார் 200 லிட்டர் மெத்தனால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் மட்டுமல்லாமல் உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோரை விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளேன். விசாரணை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவேன் என உறுதி அளிக்கிறேன். கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக வழக்கை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளேன்” என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
கூடுதல் நிவாரணங்கள் என்ன?
தொடர்ந்து கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட ரூ. 10 லட்சம் நிவாரணத்துடன் கூடுதல் நிவாரணத்தையும் அறிவித்தார்.
அவர், ”கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு உயர்கல்வி வரையிலான கல்வி, விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவையும் தமிழக அரசே முழுமையாக ஏற்கும்.
பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வைப்பு தொகையாக வழங்கப்படும். பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வைப்பு நிதியாக வழங்கப்படும்.
பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு பாதுகாவலர் பராமரிப்பில் வளர 18 வயது நிறைவடையும் வரை மாதம் தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளிலும் அக்குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அரசு மற்றும் அரசின் நிதி உதவி பெறும் இல்லங்கள் மற்றும் விடுதிகளில் குழந்தைகள் விருப்பத்திற்கு ஏற்ப சேர்க்கப்படுவர்” என்று அறிவித்தார்.
அரசியல் பேச நான் விரும்பவில்லை!
மேலும் அவர், “தமிழ்நாட்டு முதலமைச்சர் என்ற முறையில், இந்த பிரச்னையில் இருந்து நான் ஓடி ஒளிபவன் அல்ல. பொறுப்பை உணர்ந்ததால்தான் பொறுப்புடன் பதிலளித்துக் கொண்டிருக்கிறேன். திறந்த மனதோடு இரும்பு கரம் கொண்டு குற்றம் புரிந்தவர்களை அடக்கி வருகிறேன்.
அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட கள்ளச்சாராயம் தொடர்பான பட்டியல் என் கையில்தான் இருக்கிறது. போதைப்பொருள் விவகாரத்தில் அதிமுக அமைச்சர்கள் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் ஈடுபட்டது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் இருப்பதை மக்கள் மறந்துவிடவில்லை. அதையெல்லாம் வைத்து அரசியல் பேச நான் விரும்பவில்லை. இதை அரசியலாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை சமூக விரோத சக்திகளிடம் இருந்து மக்களைக் காக்க மிகக் கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என இங்கு உறுதி அளிக்கிறேன்” என முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா