புகைப்பட கலைஞர் திடீர் மரணம் : முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

Published On:

| By christopher

தி இந்து நாளிதழின் மூத்த புகைப்பட கலைஞர் கே.வி.சீனிவாசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், நிவாரண தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

புத்தாண்டு பிறந்து நடைபெறும் வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சியையொட்டி இன்று (ஜனவரி 2) பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

அதன்படி, சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலிலும் அதிகாலை விசேஷ அபிஷேகங்கள் நடைபெற்று, சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதில் ஏராளமான பக்தர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பு தரிசனத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே சொர்க்கவாசல் திறப்பு சிறப்பு நிகழ்வை புகைப்படம் எடுக்கும் பணியில், தி இந்து நாளிதழின் மூத்த புகைப்பட கலைஞர் கே. வி .சீனிவாசன் ஈடுபட்டிருந்தார்.

ADVERTISEMENT

ஆனால் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக அருகே இருந்த ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அவரை சிகிச்சைக்காக அழைத்து செல்லும் வழியில் உயிர் பிரிந்தது.

பணியில் இருக்கும் போதே மறைந்த மூத்த புகைப்பட கலைஞர் கே. வி .சீனிவாசன் மறைவு செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரவு மறைவுக்கு செய்தி துறையினை சேர்ந்த பிரபலங்களும், பல்வேறு அரசியல்கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

அந்த வகையில் தற்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 2) வெளியிட்டுள்ள அறிக்கையில் “தி இந்து ஆங்கில நாளிதழில் மூத்த புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்த திரு.கே.வி.சீனிவாசன் அதிகாலை 4.30 மணியளவில் சென்னை, திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி வைபவ நிகழ்ச்சியை புகைப்படம் எடுத்து வெளியிடுவதற்கான பணியிலிருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.

கே.வி. சீனிவாசனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஊடகத் துறை நண்பர்களுக்கும் இத்துயர்மிகு நேரத்தில் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், தமிழ்நாடு அரசின் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித் திட்டத்தின் கீழ் உயிரிழந்த கே.வி. சீனிவாசன் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என குறிப்பிட்டிருக்கிறார்.

கிறிஸ்டோபர் ஜெமா

நிர்வாணமாக காரில் இழுத்துச் செல்லப்பட்ட இளம்பெண்: குற்றவாளிகளை தூக்கிலிட கோரிக்கை!

மீண்டும் வந்த தேர்தல் ஆணையத்தின் கடிதம்: அதிருப்தியில் எடப்பாடி

Photo of author
christopher
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share