வேலூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் துரைமுருகன் குறித்து ஸ்டாலின் உருக்கமாக பேசியதால் துரைமுருகன் கண்கலங்கினார்.
வேலூர் பள்ளிகொண்டாவில் திமுக முப்பெரும் விழா பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் இன்று (செப்டம்பர் 17) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியபோது, “கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் இந்த நேரத்தில் வேலூரில் திமுக முப்பெரும் விழாவை கொண்டாடுவது மிக மிக பொருத்தமானது. நம்முடைய பொதுச்செயலாளர் துரைமுருகன் அண்ணனின் சொந்த மாவட்டம் வேலூர்.
அவர் இந்த மாவட்டத்தோடு இணைந்து பணியாற்றி வருகிறார். பல மேடைகளில் என்னை கால் சட்டை பையனாக பார்த்தேன், இன்று தலைவராக பார்க்கிறேன் என்று சொல்வார். அப்படிப்பட்ட நான் திமுக தலைவராகவும் அவர் பொதுச்செயலாளராகவும் இருப்பது பெருமைக்குரிய ஒன்று. இருவருமே கலைஞரால் வளர்க்கப்பட்டவர்கள் என்பது தான் எங்களுக்கு கிடைத்த பெருமை. கலைஞரும் பேராசிரியரும் நம்மை விட்டு அடுத்தடுத்து பிரிந்த நேரத்தில் இருவருமாக இருந்து எனக்கு அறிவுத்துணையாக ஆலோசனைகளை வழங்கி வரக்கூடியவர் எனது அருமை அண்ணன் துரைமுருகன். அனுபவத்தை விட சிறந்த பாட புத்தகம் எதுவும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட அனுபவ பாடத்தை அவர் எனக்கு தொடர்ந்து வழங்கி வருகிறார்.
மிக முக்கியமான பிரச்சனை எதுவாக இருந்தாலும் பழைய நிகழ்ச்சிகளை நினைவூட்டி அவர் வழிநடத்துவார். அப்படிப்பட்ட கழக பொதுச்செயலாளர் மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா மாநாடு போல நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதனை சீரோடும் சிறப்போடும் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருக்கிற வேலூர் மாவட்ட செயலாளர் நண்பர் நந்தகுமார் அவர்களையும் அவருக்கு துணை நின்றிருக்ககூடிய மாவட்ட கழக நிர்வாகிகளையும் நான் மனதார வாழ்த்துகிறேன். நந்தகுமார் சுறுசுறுப்பாகவும் துருதுருவெனவும் பணியாற்றக்கூடியவர். சிரித்த முகத்தோடு சீரிய பணிகளை ஆற்றக்கூடியவர். நம்முடைய மாநகர செயலாளர் கார்த்திகேயன் இல்லாமல் எங்கேயும் மாநாடு நடத்த முடியாது.
அந்தளவுக்கு அவரது ஒலிபெருக்கி தான் திமுகவின் குரலை கம்பீரமாக எங்கும் சேர்த்துக்கொண்டிருக்கிறது. வேலூரில் இரட்டையர்களாக இருவண்ண கொடியை கட்டிக்காத்து வரக்கூடிய நந்தகுமார், கார்த்திகேயன் இருவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
பெரியார், அண்ணா ஆகியோரது பிறந்தநாளையும் திமுக தொடக்க நாளையும் இணைத்து முப்பெரும் விழா கொண்டாட வேண்டும் என்று 1985-ஆம் ஆண்டு கலைஞர் அறிவித்தார். அன்று முதல் இன்று வரை முப்பெரும் விழாவை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டுக்கு இரண்டு கூடுதல் சிறப்புகள் உள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழாவையும், நம் இயக்கத்தின் பவள விழாவையும் கொண்டாடி வருகிறோம். அந்தவகையில் பார்த்தால் ஐம்பெரும் விழாவை இன்று நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.
ஓர் அரசியல் இயக்கம் 75 ஆண்டுகள் நின்று நிலைத்திருப்பது சாதாரணமானது அல்ல. தோன்றிய காலத்தில் எப்படி இருந்ததோ அதே இளமையோடு வேகத்தோடு திமுக சிறப்போடு இருப்பதற்கு தொண்டர்கள் தான் காரணம். தொண்டர்களால் கட்சி தலைவராகவும் முதல்வராகவும் ஆனவன் நான். இந்த இயக்கத்தை நீங்களும் உங்கள் குடும்பமும் சேர்ந்து தான் வாழவைத்துக்கொண்டிருக்கிறது. இன்னும் சிறப்பாக நூற்றாண்டு விழாவையும் கொண்டாடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
“மாநில உரிமைகளை பாஜக சிதைக்கிறது” – ஸ்டாலின்
சரியும் மேட்டூர் அணை நீர் இருப்பு: கேள்விக்குறியில் சம்பா, தாளடி சாகுபடி!