தமிழகத்தில் நிறைவேற்றப்படுகிற திட்டங்களை பிற மாநிலங்களில் பின்பற்றுகிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அண்ணா பிறந்தநாளான இன்று கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இந்தநிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசும்போது, “இத்திட்டத்தை நான் தொடங்கி வைப்பது, என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பேறாக கருதுகிறேன். தாய் தமிழ்நாட்டிற்கு “தமிழ்நாடு” என்று பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா அவர்கள் இனி இந்தப் பெயரை யாராலும் நீக்க முடியாது. இந்தப் பெயர் நீட்டிக்கும் காலமெல்லாம் இந்த நாட்டை அண்ணாத்துரை தான் ஆள்கிறான் என்றார்.
அதே போல், இன்றைக்கு இந்த மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கும் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொல்கிறேன், இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பெண்கள் உரிமைத் தொகை பெறுகிறார்களோ அத்தனை ஆண்டுகளுக்கும் இந்த ஸ்டாலின் தான் ஆள்கிறான் என்று பொருள். இந்த இரண்டரை ஆண்டில் எத்தனை திட்டங்கள்.
மகளிருக்கு கட்டணமில்லாப் பேருந்து வசதிகளை தருகின்ற “விடியல் பயணம் திட்டம், பசியோடு பள்ளிக்கு வருகின்ற குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம், உயர்கல்வி கற்க வருகின்ற மாணவியருக்கு ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற புதுமைப்பெண் திட்டம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும், நான் முதல்வன் திட்டம், இந்த திட்டங்களை தொடங்கிய நாட்களில் எப்படிப்பட்ட மகிழ்ச்சியை நான் அடைந்தேனோ, அதைவிட அதிகமான மகிழ்ச்சியில் இப்போது இருக்கின்றேன்.
அண்ணா பிறந்தநாளில், கலைஞர் நூற்றாண்டில் செயல்படுத்துகின்ற இந்தத் திட்டத்திற்கு, இதைவிட என்ன பாராட்டு இருக்க முடியும்?
“இது நிறைவேற்ற முடியாத வாக்குறுதி, பொய்யான வாக்குறுதியை கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டார்கள். இவர்களால் தர முடியாது” என்று பொய் பரப்புரையை தங்களுடைய உயிர்மூச்சாக வைத்து வாழுகின்ற சிலர்சொன்னார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் கொடுத்திருப்போம். ஆனால் நிதி நிலைமை சரியாக இல்லை. அதனால்தான், நிதி நிலைமையை ஓரளவுக்கு சரி செய்துவிட்டு இப்போது கொடுக்கின்றோம். இதையும் சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
பொய்களையும், வதந்திகளையும் கிளப்பி இந்த திட்டத்தை முடக்க நினைத்தார்கள். அறிவித்துவிட்டால், எதையும் நிறைவேற்றிக் காட்டுவான் இந்த ஸ்டாலின் என்று தமிழ்நாட்டு மக்களான உங்களுக்கு நன்றாக தெரியும். சொன்னதைச் செய்வான் கலைஞரின் மகன் என்பதற்கு இதுதான் சாட்சி.
எங்கள் அம்மா இல்லை என்றால் நான் இல்லை”என்று எத்தனையோ சாதனை மாணவிகள் பேட்டி தருவதை தொலைக்காட்சியில், பத்திரிகைகளில் பார்த்திருக்கின்றோம். படித்திருக்கின்றோம். பூட்டிய இரும்புக் கூட்டின் கதவை திறந்து, பெண் அடிமைத்தனத்தை தகர்த்து, பெண்களுக்கான சமூக, பொருளாதார விடுதலையை மீட்க எத்தனையோ சமூக சீர்திருத்தவாதிகள் முன்வந்தாலும், இருபதாம் நூற்றாண்டில், தந்தை பெரியாருடைய சுயமரியாதை இயக்கம்தான் வீறுகொண்ட போராட்டங்களின் மூலமாக பெண் விடுதலைக்கு பாதை அமைத்தது. அதனால்தான் 1938-ஆம் ஆண்டில் “தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் “பெரியார் என்ற பட்டத்தை பெண்கள் எல்லோரும் சேர்ந்து கொடுத்தார்கள். இன்றைக்கும் ஏழைக் குடும்பங்களையும், கிராமப் பொருளாதாரத்தையும் சுமக்கும் முதுகெலும்பாக பெண்கள்தான் இருக்கிறார்கள்” என்றார்.
தொடர்ந்து ஸ்டாலின் பேசியபோது, “ஒவ்வொரு நாளும் தன் திறனுக்கேற்ற பணிபுரிந்து பொருள் ஈட்டும் ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் அவருடைய தாய், சகோதரி, மனைவி என அந்த ஆணின் வீட்டுப் பெண்களுடைய பல மணிநேர உழைப்பு மறைந்திருக்கிறது.
ஒரு ஆணினுடைய வெற்றிக்காகவும், தங்கள் குழந்தைகளுடைய கல்வி, உடல்நலம் காக்கவும், ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் பெண்கள் உழைத்திருப்பார்கள்? அதற்கெல்லாம் ஊதியம் கணக்கிட்டு கொடுத்தால் எவ்வளவு கொடுப்பது? ஆனால் “ஹவுஸ் ஒய்ஃப்” என்று சிலர் சாதாரணமாக சொல்லிவிடுவார்கள்.
என்னுடைய அரசியல் வாழ்க்கையில் சிறு சிறு சம்பவங்களைகூட துவக்க காலத்தில் என் அம்மாவிடம் சொல்லித்தான், கலைஞரிடம் சொல்லச் சொல்வேன். இன்றைக்கு அவர்கள் வயது முதிர்ந்த நிலையில், கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். நான் சென்று பார்க்கின்றபோது என் அம்மா முகத்தில் ஏற்படுகின்ற மகிழ்ச்சிக்கு இணையானது வேறு எதுவும் கிடையாது.
அதேபோலதான் என்னுடைய மனைவி துர்காவும் என்னுடைய பாதி என்று சொல்கின்ற அளவுக்கு என்கூட இருக்கிறார்கள். திருமணமாகி ஐந்தாவது மாதத்தில் மிசாவில் நான் கைது செய்யப்பட்டு, ஒராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டேன். என் மனைவி அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவர்கள் இல்லை. முதலில் அவருக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. அப்புறம் பொதுவாழ்க்கையில் இதெல்லாம் சகஜம், இயல்பு என்று புரிந்து தன்னை பக்குவப்படுத்திக் கொண்டார்கள். என் வாழ்க்கையில் எத்தனையோ மேடு பள்ளங்கள். எல்லாவற்றிலும் எனக்கு உற்ற துணையாக, உறுதுணையாக இருந்து என்னுடைய மிகப்பெரிய சக்தியாக இருக்கிறது என்னுடைய மனைவி துர்கா அவர்கள்தான்.
அடுத்து, என்னோட மகள் செந்தாமரை. அவர்களை அன்பின் வடிவம் என்று தான் சொல்லமுடியும். நான் எந்தப் பொறுப்பில் இருந்தாலும், தான் உண்டு, தன்னுடைய வேலைகள் உண்டு என்று அவர் இருப்பார். ஒரு அரசியல்வாதியினுடைய மகள் என்ற சாயல் தன் மேல் விழுந்துவிடக் கூடாது என்று உன்னிப்பாக அதில் உஷாராக இருப்பார். சுயமாக வளர வேண்டும் என்று நினைப்பார். அந்த வகையில் நான் ரொம்ப கொடுத்து வைத்தவன்.
கருணைமிகு தாய் – தூணாக விளங்கும் மனைவி – தன்னம்பிக்கை கொண்ட என்னுடைய மகள் – இந்த மூன்றும் எனக்கு கிடைத்திருக்கிறது. இதே மாதிரியான பேருள்ளம் கொண்டவர்கள்தான் நீங்கள் எல்லோரும். மகளிர் அனைவரும். இத்தகைய மகளிரின் நலம் காத்த மாண்பாளர் என்றால் நம்முடைய கலைஞர் தான்.
தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா- கலைஞர் ஆகிய மூவரும் வகுத்துத் தந்த பாதையில் செயல்படுகின்ற அரசுதான் நம்முடைய திராவிட மாடல் அரசு. மகளிருக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறது.
விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக் குழுக்கள் சுழல்நிதி – கடனுதவிகள் என்று மகளிருக்காக ஏராளமான திட்டங்களை நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது.
இது எல்லாவற்றிற்கும் மகுடம் சூட்டக்கூடிய வகையில்தான் இந்தத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிருக்கு இனி மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. இது உங்களுக்கான உதவித் தொகை இல்லை, உங்களுடைய உரிமைத் தொகை. மீண்டும், மீண்டும் சொல்லுகிறேன். இது உதவித் தொகை இல்லை உங்களுடைய உரிமைத் தொகை.
உங்களில் ஒருவனான இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சமூகத்தில் உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரமாக வழங்குகின்ற தொகை. தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய முதியோர் ஒய்வூதியம், அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஒய்வூதியம், கைம்பெண் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களில் ஏற்கனவே பயன்பெற்று வரும் 39 லட்சத்து 14 ஆயிரத்து 81 பயனாளிகளுக்கு, 12 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் பெற்று வந்த மாத ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயிலிருந்து ஆயிரத்து இருநூறு ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டிருக்கிறேன்.
இதற்காக, கூடுதலாக 940 கோடி ரூபாய் நிதியை நமது அரசு ஒதுக்கியிருக்கிறது. மொத்தத்தில் பார்த்தால், இன்று மகளிர் உரிமைத் தொகையை பெறும் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டும் அல்லாமல், உயர்த்தி வழங்கப்படும் ஒய்வூதியம் பெறும் 39 லட்சம் பேரையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், மொத்தத்தில் ஒரு கோடியே 45 லட்சம் குடும்பங்கள் தமிழ்நாடு அரசினுடைய மாத ஒய்வூதியத் திட்டங்களால் பயன்பெற்று வருகிறார்கள்.
நாம் கொண்டு வந்த திட்டங்களை இன்றைக்கு இந்தியாவே உன்னிப்பாக கவனிக்கிறது. மற்ற மாநிலங்கள் பின்பற்றத் துடிக்குது. இந்தியா கூட்டணிக் கூட்டங்களுக்கு நான் மற்ற மாநிலங்களுக்கு போகும்போது அங்கே வரக்கூடிய அரசியல் தலைவர்களும், பிற மாநிலத்தினுடைய முதலமைச்சர்களும் சந்திக்கின்றபோது நம்முடைய அரசு கொண்டு வருகின்ற திட்டங்களைப் பற்றி ஆர்வமாக கேட்கிறார்கள் விசாரிக்கிறார்கள். தங்களுடைய மாநிலத்தில் செயல்படுத்துவதற்கு நினைக்கிறார்கள்.
கடந்த வாரம் ஜி-20 நாடுகளின் மாநாடு டெல்லியில நடைபெற்றது. அதை முன்னிட்டு இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் அவர்கள் ஒரு சிறப்பு விருந்து கொடுத்தார்கள். அதில் நானும் கலந்து கொண்டேன். அப்போது, சில மத்திய அமைச்சர்கள் கூட நமது சிறப்புத் திட்டங்கள் பற்றி விசாரித்தார்கள். இவை எல்லாம் ஏதோ எனக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்திருக்கக்கூடிய பாராட்டுக்களாக நான் கருதவில்லை.
தமிழ்நாடு அரசுக்கும், நம்முடைய மக்களுக்கும் கிடைத்திருக்கக்கூடிய பாராட்டுகளாகத்தான் நான் கருதுகிறேன். பசிப்பிணியும் போக்கி வருகிறோம் அறிவுப்பசியையும் தணித்து வருகிறோம். இன்னார் படிக்க வேண்டும், இன்னார் படிக்கக் கூடாது என்கின்ற நிலையை மாற்றி, இன்னார் உயரவேண்டும், இன்னார் உயரக் கூடாது என்கின்ற நிலையை மாற்றி, எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வழிவகை செய்கின்ற திராவிட மாடல் ஆட்சி, கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கலைஞர் பெயரில் உரிமைத் தொகை மூலமாக வழங்கிக் கொண்டு வருகிறோம். பெண்களுக்கு சமூக – பொருளாதார – அரசியல் வலிமையை வழங்குவது. உங்கள் கனவுகளை நிறைவேற்றும் ஆட்சி இது. உங்கள் கவலைகளைப் போக்கும் ஆட்சி இது. தொல்லை, இனி இல்லை. வானமே உங்களது எல்லை” என்று தெரிவித்தார்.
செல்வம்
பாகிஸ்தானுக்கு படுகுழி வெட்டிய சிஎஸ்கே வீரர்கள்.. ஆனால் இந்தியாவுக்கு ஜாலி!