மகளிர் இடஒதுக்கீட்டைத் தடுத்து, சதி செய்த மாதிரியே, சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தவும் பாஜக அரசு முன்வரவில்லை என்று முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் மூன்றாவது தேசிய இணைய மாநாட்டில், ஸ்டாலின் நேற்று (டிசம்பர் 3) முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டார்.
இம்மாநாட்டில், ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன், பீகார் மாநில முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா,
சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்திரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபரூக் அப்துல்லா, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் ஸ்டாலின் பேசியபோது,
அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம்!
சமூக நோய்களை முறிக்கும் மருந்தே, ‘சமூகநீதி’. சமூகநீதியைஅடையவேண்டும் என்பது தனிப்பட்ட ஒரு மாநிலத்தின் எண்ணமோ, இந்தியாவின் பிரச்சினையோ அல்ல. எங்கெல்லாம் புறக்கணிப்பு ஒதுக்குதல் தீண்டாமை அடிமைத்தனம் அநீதி இருக்கிறதோ, அங்கெல்லாம் சமூக நோய்களை முறிக்கும் மருந்தாக இருப்பதுதான் சமூகநீதி.
சமூகரீதியாக, கல்விரீதியாக புறக்கணிக்கப்பட்டவர்களை கைதூக்கிவிடுவதுதான், சமூகநீதி. சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்கள் என்பதுதான் அரசியலமைப்புச் சட்டத்தின் சமூகநீதி வரையறை.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 340–ஆவது பிரிவில் ‘socially andeducationally’ என்பதுதான் வரையறையாக இருக்கிறது. அதே சொல்தான் அரசியலமைப்புச் சட்டத்தின் திருத்தத்திலும் சொல்லப்பட்டது.
அதாவது சமூகநீதி எனப்படும் இட ஒதுக்கீடு என்பதே சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்களுக்குத் தரப்படவேண்டும் என்பதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்ட வரையறை.
இந்தியா முழுமைக்கும் பரவிய திராவிட இயக்க கருத்தியல்!
இந்தத் திருத்தத்திற்கே காரணம், அன்றைய சென்னை மாகாணம்தான். இந்தத் திருத்தத்திற்குக் காரணமான தலைவர்கள் தான் பெரியாரும், அண்ணாவும்.
“சமுதாயத்திலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட வராக இருக்கும் எந்தச் சமூகத்தவர்க்கும் செய்யும் சலுகைகளையும் அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவும் தடுக்காது” என்பதுதான் அரசியல் அமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட முதலாவது திருத்தம்.
இந்த திருத்தத்திற்குக் காரணம், “happenings in madras தான்” என்று நாடாளுமன்றத்திலேயே கூறினார் அன்றைய பிரதமர் நேரு.
சென்னை மாகாணத்தில் ஆட்சியை கைப்பற்றிய நீதிக்கட்சியின் ஆட்சியில், 1922–ஆம் ஆண்டு, அன்றைய முதலமைச்சர் பனகல் அரசர் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமை ஆணையைப் பிறப்பித்தார்.

அதுதான் இன்றைக்கு வரைக்கும் தமிழ்நாட்டில் தொடர்கிறது. தமிழ்நாட்டை பார்த்து பல்வேறு மாநிலங்கள் சமூகநீதியை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு சமூகநீதி வழங்கியதோடு, இந்தியாவின் மற்ற மாநில ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், அத்தகைய உரிமை கிடைக்க வழிகாட்டியதும் திராவிட இயக்கம்தான். இந்தக் கருத்தியல்தான் இன்றைக்கு அகில இந்தியா முழுமைக்கும் பரவி இருக்கிறது.
ஆனால், சமூகநீதியை பாஜக முறையாக அமல்படுத்துவது இல்லை. கடந்த பத்தாண்டு காலத்தில் மத்திய அரசின் துறைகளில், பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு ஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படவில்லை.
மகளிர் இடஒதுக்கீட்டுக்கு முட்டுக்கட்டை போடும் பாஜக
ஏழை எளிய, பிற்படுத்தப் பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்கள் முன்னேறுவதை பாஜக விரும்பவில்லை. அதனால்தான், அவர்கள் சமூகநீதிக்கு எதிராக இருக்கிறார்கள். இடஒதுக்கீட்டில், பொருளாதார அளவுகோலை நுழைக்கத் துடிக்கிறார்கள்.
ஏழை எளிய மக்களுக்கு பொருளாதார உதவி செய்வதை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால், சமூகரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இடஒதுக்கீட்டை, பொருளாதார அளவுகோலை மட்டுமே அடிப்படையாக வைத்துவிட்டு பொதுப்பிரிவினருக்கும் வழங்குவதைத்தான் எதிர்க்கிறோம்.
எப்படி பாஜக, பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விரோதமான கட்சியோ, அதேபோன்று பெண்களுக்கும் விரோதமான கட்சிதான். அதனால்தான், பெண்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார்கள்.
மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை, ஒரே ஒரு கட்சியை தவிர, மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இருந்த எல்லா கட்சிகளும் ஆதரித்து வாக்களித்தார்கள். எந்த முக்கியக் கட்சியும் எதிர்த்து வாக்களிக்கவில்லை. ஆனால், அது செயல்பாட்டிற்கு வந்துவிடக்கூடாது என்ற தடையை பாஜகவே அந்த சட்டத்திற்குள் ஷரத்துக்களாக எழுப்பியது. அதை வைத்து தொகுதி மறுவரையறைகள் முடிந்த பிறகு மகளிருக்கு 33 விழுக்காடு தருவோம் என்று சொன்னார்கள்.
பெண்ணுரிமைத் தீர்மானங்கள் !
மக்கள்தொகை கணக்கெடுப்பும், தொகுதி வரையறையும் முடிந்த பிறகு என்றால் 2029–ஆம் ஆண்டுக்குப் பிறகுதான், 33 விழுக்காடு இடஒதுக்கீடு பெண்களுக்கு கிடைக்கும். 2029–ஆம் ஆண்டு அதாவது இன்னும் 6 ஆண்டுகள் கழித்து நிறைவேறப்போகும் சட்டத்தை இப்போதே நிறைவேற்றிவிட்டதாக கணக்குக் காட்டியது பாஜக அரசு. சட்டத்தைக் கொண்டுவந்த பா.ஜ.க., தடையையும் போட்டிருக்கிறது!
1996–ஆம் ஆண்டு, 2010–ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டங்களில் இது மாதிரியான தடை சுவர்கள் இல்லை. அப்படி என்றால், இப்போது இந்தத் தடைகளை உருவாக்கியது யார்? இந்த சட்டத்தை கொண்டு வந்த பாஜகவே தடையையும் போட்டிருக்கிறது.
1929–ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த சுயமரியாதை மாநாட்டில்தான், பெண்களுக்குச் சொத்துரிமை, பணியுரிமை, மறுமணம் செய்துகொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு புரட்சிகரமான பெண்ணுரிமைத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன் தொடர்ச்சியாகத்தான், திமுக அரசில் பெண்களின் நலன் சார்ந்த பல்வேறு அடுக்கடுக்கான திட்டங்கள் தீட்டப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எந்தக் கொள்கையைக் கூறினோமோ, அதை சட்டபூர்வமாகச் செயலாக்கி வரும் அரசுதான், திமுக அரசு.
மகளிர் இடஒதுக்கீட்டைத் தடுத்து, சதி செய்த மாதிரியே, சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தவும் பாஜக அரசு முன்வரவில்லை.
சாதிவாரிக் கணக்கெடுப்பை மத்திய அரசு உடனே நடத்த வலியுறுத்தி தமிழ்நாடு சட்டசபையில் நாம் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.

சாதிவாரிக் கணக்கெடுப்பு!
இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சம உரிமை மற்றும் வாய்ப்பு கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் திட்டங்களைத் தீட்டி, சட்டங்கள் இயற்ற சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அவசியம்.
2021–ஆம் ஆண்டே எடுக்கப்பட்டிருக்க வேண்டிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை மத்திய பாஜக அரசு உடனே தொடங்கவேண்டும். அதோடு இணைத்து சாதிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்தவேண்டும்.
இதைச் செயல்படுத்த பாஜக அரசு மறுக்கிறது. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தினால், அதை வைத்து உண்மையான சமூகநீதியை வழங்கவேண்டும் என்றுதான் தயங்குகிறார்கள்.
சாதிவாரிக் கணக்கெடுப்பை எடுக்க மறுப்பது மூலமாக சமூகநீதிக்கும், மகளிர் இடஒதுக்கீட்டு சட்டத்தை தள்ளிப் போட்டதால் பெண்ணுரிமைக்கும் எதிராக இருக்கிறது இந்த பாஜக அரசு.
இதற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கவேண்டும்!
•பட்டியலின மக்களின் இடஒதுக்கீடு முறையாக வழங்கப்படவேண்டும்.
•பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு முறையாக வழங்கப்படவேண்டும்.
•சிறுபான்மையினர் இடஒதுக்கீடு முறையாக வழங்கப்படவேண்டும்.
•நீதித்துறையில் இடஒதுக்கீடு செயல்பாட்டிற்கு வரவேண்டும்.
•இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின சமுதாயத்தினருக்கு, பதவி உயர்வில் இடஒதுக்கீடு உறுதி செய்யப்படவேண்டும்.
•சாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்தி, அதன் தரவுகளை வெளியிடவேண்டும்.
இதையெல்லாம் அகில இந்திய அளவிலும், மாநிலங்கள் அளவிலும் கண்காணிக்க வேண்டும். சமூகரீதியாகவும் கண்காணிக்கவேண்டும்.
•தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததும், ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையத்தை அமைத்தது. சமூகநீதி ஆணையத்தை அமைத்தது. சமூகநீதி கண்காணிப்புக் குழுவை அமைத்தது. இந்தக் கண்காணிப்புக் குழு, கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல், முறையாக, முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணித்து வருகிறது.
இதேபோன்று அனைத்து மாநிலங்களிலும் குழுக்கள் அமைக்கப்படவேண்டும்.
•சமூக நீதி – Social Justice
•மதச்சார்பற்ற அரசியல் – Secular Politics
•சமதர்மம் – Socialism
•சமத்துவம் – Equality
•மாநில சுயாட்சி – State Autonomy
•கூட்டாட்சிக் கருத்தியல் – Federalism – இவை உயிர்வாழும் இந்தியாவே, இணையற்ற இந்தியா!
எனவே, இத்தகைய கருத்தியல்களை நாம் ஒன்றுசேர்ந்து முன்னெடுக்கவேண்டும். சமூகநீதி இந்தியாவை உருவாக்க சமதர்ம இந்தியாவை உருவாக்க சகோதரத்துவ இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் இணைந்து போராட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சோளம் கம்பு பூண்டு ரொட்டி
திருவண்ணாமலை மகா தீபம் ஏற்பாடுகள் : அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!
Comments are closed.