“திராவிட நிலப்பரப்பில் பாஜக முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது”: ஸ்டாலின்

Published On:

| By Selvam

கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதன் மூலம் திராவிட நிலப்பிரப்பில் இருந்து பாஜக முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க தேவையான 113 இடங்களை கடந்து 3 மணி நிலவரப்படி 135 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 65 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 20 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

கர்நாடாகாவில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளதால் அக்கட்சி முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோரை தொலைபேசியில் தொடர்புகொண்டு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் காங்கிரஸ் வெற்றி குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

“கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள்.

கர்நாடக மக்கள் வாக்களித்தபோது, நியாயப்படுத்த முடியாத வகையில் சகோதரர் ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்றத்தில் இருந்து பதவிநீக்கம் செய்தது, நாட்டின் முதன்மைப் புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தியது, இந்தித் திணிப்பு, பெருமளவிலான ஊழல் என அனைத்தும் அவர்கள் மனதில் எதிரொலித்திருக்கிறது.

பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி அவர்கள் தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர்.

திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. அடுத்து, 2024 பொதுத்தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்.

இந்தியாவில் மக்களாட்சியையும், அரசியலமைப்பு விழுமியங்களையும் மீட்போம்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

கர்நாடகா தேர்தல் ரிசல்ட்: பாஜக சொல்வது என்ன?

கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை : 12 மணி நிலவரம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share