2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் இலக்கு: ஸ்டாலின்

Published On:

| By Selvam

mk stalin says 1 trillion economy

2030-ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம் என்ற இலக்கை அடைகின்ற நாள் வெகு தொலைவில் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த கேப்பிட்டாலேண்ட் குழுமத்தின் சர்வதேச தொழில்நுட்ப பூங்காவை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியபோது, “நான்‌ கடந்த மே மாதம்‌ சிங்கப்பூருக்கு அரசு முறைப்‌ பயணமாக சென்றிருந்தேன்‌. அங்கே கிடைத்த வரவேற்பும்‌, உற்சாகமும்‌ எங்களால்‌ மறக்க முடியாதது.

இந்தப்‌ பயணத்தின்போது, கேப்பிட்டாலேண்ட்‌ நிறுவனத்தின்‌ தலைமை செயல் அதிகாரி சஞ்சீவ்‌ தாஸ்‌ குப்தா அவர்களை சந்தித்து அவர்கள்‌ நிறுவனம்‌ பல முதலீட்டுத்‌ திட்டங்களை தமிழ்நாட்டில்‌ மேற்கொள்ளுவதை பற்றி பேச்சுவார்த்தைகள்‌ நடத்தினேன்‌. அதன்‌ தொடர்ச்சியாக, இந்த விழா நடைபெறுவது உள்ளபடியே மகிழ்ச்சி அளிக்கிறது.

தொழில்துறையில்‌ முதன்மை மாநிலமாக முன்னேற வேண்டும்‌ என்ற உயரிய நோக்கத்துடன்‌ பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள்‌ மேற்கொண்டு வருகிறோம்‌. அது மட்டுமல்ல, இந்த வளர்ச்சி சீராகவும்‌, பரவலாகவும்‌ இருக்க வேண்டுமென்று மாநிலத்தில்‌ இருக்கின்ற இரண்டாம்‌ மற்றும்‌ மூன்றாம்‌ அடுக்கு, நகரங்களிலும்‌ 9 நியோ டைடல்‌ பார்க்குகள்‌ அறிவிக்கப்பட்டு. செயல்படுத்தப்பட்டும்‌ வருகிறது.

உலக அளவில்‌, அதிவேகமாக ஏற்பட்டு வருகின்ற தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நம்முடைய தொழில்துறையும்‌ பயணம்‌ செய்வது இன்றியமையாத ஒன்று. இதற்கான முயற்சிகளை ஊக்கப்படுத்தி இந்த‌ துறையில்‌ முதலீடுகளை ஈர்க்கின்ற நோக்கத்தில்தான்‌ “தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும்‌ மேம்பாட்டு கொள்கை 2022 கடந்த ஆண்டு ஜூலை மாதம்‌ என்னால்‌ வெளியிடப்பட்டது.

இதற்குப்‌ பிறகு, ஆராய்ச்சி மற்றும்‌ மேம்பாடு புத்தாக்கம்‌, புத்தொழில்கள்‌ மற்றும்‌ உலகளாவிய திறன்‌ மேம்பாட்டு மையங்கள்‌ போன்ற துறைகளில்‌ ஒரு பெரும்‌ மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தொழில்துறை, கல்வியாளர்கள்‌, புத்தாக்கம்‌ மேற்கொள்வோர்‌ மற்றும்‌ புத்தொழில்‌ நிறுவனங்களுக்கு இது மிகப்பெரும்‌ வாய்ப்புகளை வழங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஆராய்ச்சி மற்றும்‌ மேம்பாடு தொடர்பான உலகளாவிய திறன்‌ மையங்கள்‌ மற்றும்‌ குளோபல்‌ கேப்பபிலிட்டி சென்டர்ஸின்‌ எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. முப்பதுக்கும்‌ மேற்பட்ட ஜிசிசி-க்கள்‌ தங்களுடைய புதிய நிறுவனங்கள்‌ அல்லது விரிவாக்கத்‌ திட்டங்களை நிறுவியிருக்கிறார்கள்‌.. யு.பி.எஸ்‌, வால்மார்ட்‌ மற்றும்‌ ஹிட்டாச்சி எனர்ஜி போன்ற சர்வதேச நிறுவனங்கள்‌ தங்களுடைய ஜிசிசி மற்றும்‌ ஆராய்ச்சி மற்றும்‌ மேம்பாட்டு மையங்களை அண்மையில்‌ நிறுவியிருக்கிறது.

உற்பத்தி மற்றும்‌ சேவைத்‌ துறைகளில்‌, தமிழ்நாடு உலக அளவில்‌ சிறந்து விளங்கி வருகிறது. இது மாநிலத்தின்‌. வளர்ச்சிக்கும்‌ மிகப்பெரிய பயனை ஏற்படுத்தும்‌. இந்த வேகத்தை பார்க்கின்றபோது. 2030-ஆம்‌. ஆண்டிற்குள்‌ 1 டிரில்லியன்‌ டாலர்‌ பொருளாதார மாநிலம்‌ என்ற எங்கள்‌ இலக்கை அடைகின்ற நான்‌ வெகு தொலைவில்‌ இல்லை. என்ற நம்பிக்கை எங்களுக்கு வளர்ந்து கொண்டே போகிறது.

இதற்கெல்லாம்‌ மணிமகுடமாக, உலக முதலீட்டாளர்கள்‌ மாநாடு வருகின்ற ஜனவரி மாதம்‌ சென்னையில்‌ நடத்த இருக்கின்றோம்‌. உங்களைப்‌ போன்ற நிறுவனங்களுடன்‌ சேர்ந்து தான் இந்த மாநாட்டை நடத்த இருக்கிறோம்‌. உலகம்‌ முழுவதிலும்‌ இருந்து பல்வேறு தொழில்‌ நிறுவனங்கள்‌ தமிழ்நாட்டை நோக்கி வர இருக்கிறார்கள்‌. பல நிறுவனங்கள்‌ அந்த மாநாட்டில்‌ பங்கேற்று பெருமைப்படுத்த இருக்கிறார்கள்‌ என்று நான் எதிர்பார்க்கிறேன்‌. அதற்கு முன்னதாக கேப்பிட்டாலேண்ட்‌ நிறுவனம்‌ இந்த அதிநவீன பன்னாட்டு‌ தொழில்நுட்ப பூங்காவை தொடங்கி இருப்பது மிக மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

செல்வம்

சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன்!

மாநிலங்களை ஒழிக்க வேண்டும் என்பதே பாஜக நோக்கம்: முதல்வர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share