முன்னாள் முதல்வர் கலைஞரின் வரலாற்றை கவிதையாக எழுத வேண்டும் என்று வைரமுத்துவுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 1) கட்டளையிட்டார். mk stalin orders vairamuthu book release
சென்னை, காமராசர் அரங்கில் கவிஞர் வைரமுத்து எழுதிய மகா கவிதை புத்தக வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் ப.சிதம்பரம், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத் தலைவர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். மகா கவிதை புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட முதல் பிரதியை ப.சிதம்பரம் பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசும்போது, “கவிஞராகவும், கலை விமர்சகராகவும் இருந்து கோலோச்சிய கலைஞர் மட்டும் இன்று இருந்திருந்தால், ‘மகா கவிதை’ தீட்டிய வைரமுத்துவை உச்சிமுகர்ந்து பாராட்டி இருப்பார்.
பொதுவாக ஒரு கவிஞர், இன்னொரு கவிஞரைப் பாராட்ட மாட்டார். அப்படியே பாராட்டினாலும், கொஞ்சம் குறை சொல்லித்தான் பாராட்டுவார்கள்.
ஆனால், கலைஞரைப் பொறுத்தவரை, அழகிய தமிழாக இருந்தால், தன்னை அசத்திய தமிழாக இருக்குமானால், உள்ளிருந்து பாராட்டுவார், மிச்சம் வைக்காமல் பாராட்டுவார்.
அப்படி கலைஞரின் பாராட்டு மழையில் நனைந்தவர்தான் நமது வைரமுத்து. இந்த ‘கவிப்பேரரசு’ என்ற பட்டமே கலைஞர் வழங்கியது தான்.
முதன்முதலாக, 1989-ஆம் ஆண்டு ‘எல்லா நதியிலும் என் ஓடம்’ என்ற புத்தகத்தை கலைஞரை வைத்து வெளியிட்டார் வைரமுத்து.
‘எல்லா நதியிலும் என் ஓடம்’ என்று அவர் சொல்லிக் கொண்டாலும், அது எப்போதும் வந்து சேரும் கடலாகக் கலைஞர் தான் இருந்தார். இதுதான் வைரமுத்துவுக்கு இருக்கும் சிறப்பும் பெருமையும்.
வைரமுத்து எழுதிய 15 நூல்களை வெளியிட்ட கைகள் கலைஞருடைய கைகள். இது அவர்கள் இருவருக்கும் இருந்த நட்புக்குப் பெருமை.
பாசமிகு வைரமுத்து அவர்களே, இந்த நேரத்தில் உங்களிடம் ஓர் அன்பான ஒரு வேண்டுகோளை வைக்க நினைக்கிறேன்.
மகாகவி பாரதியின் வாழ்க்கை வரலாற்றை ‘கவிராஜன் கதை’ என்ற தலைப்பில் எழுதியதைப் போல, கலைஞரின் வரலாற்றை கவிதையாக நீங்கள் தர வேண்டும். இது எனது அன்பான வேண்டுகோள்.
உங்கள் தமிழில் கலைஞருக்கு ஒரு கவிதை வரலாறு வந்தாக வேண்டும் என்ற உங்கள் ரசிகனின் வேண்டுகோள், இன்னும் கூட கொஞ்சம் உரிமையோடு சொன்னால் கட்டளை.
கலைஞர் நிறைவாழ்வை எய்திய பிறகு நமது வைரமுத்துவின் ‘தமிழாற்றுப்படை’ நூலை வெளியிட்டேன். இப்போது ‘மகா கவிதை’யை வெளியிடும் வாய்ப்பையும் பெற்றுள்ளேன். வைரமுத்து எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்; அவற்றை வெளியிடும் வாய்ப்பை நான் பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய “மகா ஆசை”.
சில மாதங்களுக்கு முன்பு, என்னை வந்து சந்தித்த வைரமுத்து, இப்படி ஒரு நூலை எழுதி வருவதாகவும், அதனை நான் வந்து வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பொதுவாக, அவரது படைப்புகள் வார இதழ்களில் வெளியாகும்.
வாரா வாரம் படிக்கும் வாய்ப்பு வாசகர்களுக்கு ஏற்படும். ஆனால் இந்த ‘மகா கவிதை’ என்பது மிக மிக ரகசியமாக இருந்தது. வார இதழ்களில் எழுதப்பட்டது அல்ல இது.
எதிலும் வெளியிடப்படாமல் நேரடியாக புத்தகமாக வெளியாகி உள்ளது. எனவே, வைரமுத்து எதைப் பற்றி எழுதி இருக்கிறார் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது.
எனது ஆர்வத்தை தணிக்கும் வகையில் வைரமுத்து மற்றும் அவரது இரண்டு கவிதை வாரிசுகளும் சேர்ந்து வந்து, ‘மகா கவிதை’ நூலை என்னிடம் வழங்கினார்கள்.
அந்த புத்தகத்தை வாங்கிய போது, அதுவே மகா புத்தகமாகத் தான் இருந்தது. இன்னும் சொன்னால், ஒரு புத்தகத்தைக் கையில் வைத்திருப்பது போல இல்லாமல், ஒரு வாளைக் கையில் ஏந்தியது போல நீளமாக இருந்தது.
படைப்பு தரமாக இருப்பதைப் போல, சிலர் புத்தகங்களைத் தரமாகத் தயாரிப்பது இல்லை. படைப்பும் தரமாக இருந்து, புத்தகத்தையும் அதைவிடத் தரமாகத் தயாரிப்பதில் வைரமுத்து கண்ணும் கருத்துமாக இருப்பார். அந்த வகையில், படைப்புலகத்துக்கு மட்டுமல்ல, பதிப்புலகத்துக்கும் இந்த நூல் மகுடமாக அமைந்துள்ளது.
நிலம் – நீர் – தீ – காற்று – வானம் ஆகிய ஐம்பூதங்களைப் பற்றிய கவிதைத் தொகுப்பு என்பதை நீங்கள் அனைவரும் வாசிக்கும் போது உணர்வீர்கள். “நிலம் – நீர் – தீ – வளி – விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்” என்று சொல்கிறது தொல்காப்பியம்.
தொல்காப்பியம் தொடங்கிய இடத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் வைரமுத்து. பொதுவாக, இந்த ஐம்பூதங்களையும் யாராலும் அடக்க முடியாது என்று சொல்வார்கள். ஆனால் அந்த ஐம்பூதங்களையும் ஒரு கவிஞனால், தமிழ்க் கவிதைக்குள் அடக்க முடியும் என்பதை மெய்ப்பிக்கும் புத்தகம் தான் இந்த மகா கவிதை நூல்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழகம் வரும் மோடி: கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு என்ன?
ஜப்பானை தாக்கும் சுனாமி, நிலநடுக்கம்: உதவி எண்கள் அறிவிப்பு!
mk stalin orders vairamuthu book release