முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று (மே 2) காலை 11 மணி முதல் 12 மணி வரை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கலைஞர் நூற்றாண்டு விழாவை மாவட்டம் தோறும் சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து துறைகளிலும் நடைபெறும் திட்ட பணிகள் எந்த நிலையில் இருக்கிறது என்பதை கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின், திட்ட பணிகளை கண்காணிக்க உருவாக்கப்பட்ட டேஷ் போர்டு திட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் தங்களது திட்டங்களின் நிலைமையைப் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மக்களவை தேர்தலுக்கு தயாராவதற்கு அரசு நிர்வாக ரீதியாக சிறப்பாக செயல்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களுக்கு அழுத்தம் திருத்தமாக அறிவுறுத்தியுள்ளார்.
இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தை உடனடியாக துவக்கப்பட்டு திட்டமிட்ட காலத்திற்குள் சுணக்கமில்லாமல் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் வெளிநாடு பயணம் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோனஸ், காட்டர்பில்லர் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
செல்வம்