மொபைல் டேட்டா ஆன் செய்ததும் ஃபேஸ்புக் பச்சை லைட் காட்டியது. லொக்கேஷன் நெல்லை என்று சிமிட்டியது. ‘நெல்லையா? அங்கே முதல்வர் வந்தாரே என்ன விசேஷம்?’ என்று கேள்வியை வாட்ஸ் அப் கேட்க இம்முறை ஃபேஸ்புக்கே தனது ஸ்டேட்டஸில் மெசேஜை டைப் செய்தது.
”அரசு விழாக்களுக்காக நெல்லை, விருதுநகர், மதுரை என டூரில் இருக்கிறார் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். அந்த வகையில் நேற்று (செப்டம்பர் 7) மாலை நெல்லைக்கு சென்றார் ஸ்டாலின். நெல்லையில் அரசு விழா இன்றுதான் என்றாலும் முதல் நாள் மாலையே வந்த ஸ்டாலின் நேராக வண்ணாரப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள சர்க்யூட் ஹவுசில் தங்கினார்.
முதல்வர் வருவதற்கு ஒரு நாள் முன்பாக அதாவது செப்டம்பர் 6 ஆம் தேதி கட்சியின் மாவட்டச் செயலாளர்களாக இருக்கும் நெல்லை மத்திய மாவட்டம் அப்துல் வஹாப், நெல்லை கிழக்கு மாவட்டம் ஆவுடையப்பன் ஆகியோருக்கு ஒரு தகவல் அறிவாலயத்தில் இருந்து சென்றிருக்கிறது. அது என்னவென்றால் சர்க்யூட் ஹவுசில் தங்கும் முதல்வர் நெல்லை மாவட்டத்தில் இருக்கும் திமுக நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், மாநகரத்தில் உள்ள பகுதிச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை நேரடியாக சந்திக்க திட்டமிட்டுள்ளார். எனவே மேற்குறிப்பிட்ட நிர்வாகிகளை மட்டும் அழைத்து வரவும் வேறு யாரையும் அழைத்து வரவேண்டாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படியே செப்டம்பர் 7 ஆம் தேதி மாலை 6 மணி வாக்கில் சர்க்யூட் ஹவுஸுக்கு சென்றார் முதல்வர். சுமார் கால் மணி நேரம் அவர் ஓய்வெடுத்து ரெஃப்ரெஷ் செய்துகொண்டார். பிறகு நெல்லை மத்திய மாவட்டம், நெல்லை கிழக்கு மாவட்டம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பகுதிச் செயலாளர்களை அந்தந்த மாவட்டச் செயலாளர்களோடு சந்தித்தார்.
முதல்வர் வருவதற்கு முன்பே அனைவரும் சோதனை செய்யப்பட்டு சர்க்யூட் ஹவுஸுக்குள் உட்கார வைக்கப்பட்டனர். ஸ்டாலின் வந்ததும் மீண்டும் ஒருமுறை சோதனை செய்யப்பட்ட பின்னரே அவர் அருகே அனுப்பப்பட்டனர்.
ஒவ்வொரு ஒன்றிய செயலாளர், நகர செயலாளர், பகுதிச் செயலாளர் என அனைவரிடமும். ‘எப்படி இருக்கீங்க? கட்சி எப்படி இருக்கு? ஆட்சி எப்படி இருக்கு? மக்கள் என்ன சொல்றாங்க? சும்மா வெளிப்படையா சொல்லுங்க?’ என்று நான்கு கேள்விகளைக் கேட்டிருக்கிறார் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின்.
பலரும் தங்களது கருத்துகளை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொருவர் கருத்துகளையும் காதுகொடுத்து கேட்டுக் கொண்ட ஸ்டாலின் அவர்கள் கொடுத்த சால்வைகள், புத்தகங்கள் ஆகியவற்றை வாங்கிக் கொண்டார். சில நிர்வாகிகள் இதுதான் சரியான நேரம் என்று கட்சி பிரச்சினைகளைப் பற்றி மனுக்களாக எழுதி ஸ்டாலினிடம் கொடுத்திருந்தனர். அதையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு வாங்கி வைத்துக் கொண்டார். மாவட்டப் பொறுப்பாளர்களுக்குக் கூட அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பது தெரிந்திருக்கவில்லை. சுமார் ஒருமணி நேரம் இந்த நிர்வாகிகள் சந்திப்பை நடத்தியிருக்கிறார் ஸ்டாலின்.

அதற்குப் பிறகே மாடியில் இருக்கும் தனது சூட் அறைக்கு சென்றார் முதல்வர். அவர் அறைக்குச் சென்றதும் சபாநாயகர் அப்பாவு முதல்வரை அவரது அறைக்கு சென்று தனியாக சந்தித்தார். சுமார் பத்து நிமிடங்கள் கழித்து அவரும் திரும்பிவிட்டார். கட்சி நிர்வாகிகளை சந்திக்கும்போது சபாநாயகர் சந்திக்க முடியாது என்பதால்தான் அவர் தனியாக சென்று சந்தித்தார் என்று பொதுவான ப்ரோட்டா கால் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.
ஆனால் நெல்லை மாவட்ட அரசியலில் கடுமையான கோஷ்டிப் பூசல் நிலவி வரும் நிலையில் கட்சி நிர்வாகிகளை சந்திப்பதற்கு என்று சுமார் ஒரு மணி நேரம் ஒதுக்கிய முதல்வர் அதன் பின் சபாநாயகர் அப்பாவுவை தனியாக சந்தித்தார் என்பது நெல்லை அரசியல் சூழலில் பரபரப்பாக பேசப்படுகிறது.
மேலும் இதுவரை பல மாவட்டங்களுக்கு சென்றுவரும் முதல்வர் இவ்வளவு நேரம் ஒதுக்கி கட்சி நிர்வாகிகளை சந்தித்ததாக நாங்கள் கேள்விப்படவில்லை என்கிறார்கள் நெல்லை மாவட்ட திமுக நிர்வாகிகள்.
ஸ்டாலின் முதல்வர் ஆனதும் அவரால் கட்சி விவகாரங்களுக்கு போதிய நேரம் ஒதுக்கப்படவில்லை என்பது கட்சியினரின் புகாராக உள்ளது. இந்த நிலையில் நெல்லையைப் போன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு விழாவுக்கு போகும்போது அப்படியே உட்கட்சி அரசியலுக்கு இதுபோல சில மணி நேரங்களை ஒதுக்கி நிர்வாகிகளின் கருத்தை தனித்தனியாக ஸ்டாலின் அறிந்தாலே கட்சிப் பிரச்சினைகள் பெரும்பாலும் குறையும் என்கிறார்கள் திமுக நிர்வாகிகள்” என்ற மெசேஜை ஸ்டேட்டஸாக டைப் செய்து அதை போஸ்ட் செய்து பப்ளிக் ஆப்ஷன் கொடுத்துவிட்டு கமெண்ட்ஸுகளுக்காக காத்திருந்தது ஃபேஸ்புக்.