திமுக ‘எப்போதும் வென்றான்’… விஜய்க்கு ஸ்டாலின் மறைமுக பதில்!

Published On:

| By Selvam

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் நேற்று (அக்டோபர் 27) நடைபெற்றது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசும்போது, தவெகவின் ஐடியாலஜிக்கல் எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக என்று அறிவித்தார்.

மேலும், திராவிட மாடல் என்று சொல்லி மக்களை ஏமாற்றி அரசியல் செய்கிறார்கள் என்று ஆளும் திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார். விஜய்யின் இந்த தாக்குதலுக்கு திமுக தரப்பில் இருந்து எதிர்வினைகள் வரத்தொடங்கியுள்ளது. திமுக அமைப்புச் செயலாளார் ஆர்.எஸ்.பாரதி, “திமுக ஓர் ஆலமரம். காய்த்த மரம் தான் கல்லடிப்படும்” என்று பதிலடி கொடுத்திருந்தார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “விஜய் பாஜகவின் சி டீம்” என்று விமர்சித்திருந்தார்.

இந்தநிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் 234 சட்டமன்ற தொகுதிப் பார்வையாளர்கள் கூட்டம் இன்று (அக்டோபர் 28) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசும்போது, திமுக எப்போதும் வெற்றி பெறும் கட்சியாக இருக்கும் என்று விஜய்க்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த கூட்டத்தில் தொகுதி பார்வையாளர்கள் மத்தியில் ஸ்டாலின் பேசும்போது, “நாடாளுமன்றத் தேர்தலில் நூற்றுக்கு நூறு வெற்றியைப் பெற்றுச் சில மாதங்கள்கூட ஆகவில்லை, அதற்குள் அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராக இங்குக் கூடியிருக்கிறோம்.

சட்டமன்றத் தேர்தலிலும் நாம்தான் வெற்றி பெறப் போகிறோம். அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால், நம்முடைய அந்த வெற்றியும் நூற்றுக்கு நூறு வெற்றியாக இருக்க வேண்டும். நம்முடைய இலக்கு 200 தொகுதிகள். அதற்கான உழைப்பை, நீங்கள் இன்றிலிருந்தே தொடங்கியாக வேண்டும்.

அதற்காகத்தான் இப்போதே 234 தொகுதிகளுக்கும் தொகுதிப் பார்வையாளர்களை நியமித்துள்ளோம். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அனைத்துத் தொகுதிப் பார்வையாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளையும்  பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் தொகுதியில் நமது கட்சியும் நம்முடைய கூட்டணியும் வெற்றி பெறுவதை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு உங்களுக்குத்தான் இருக்கிறது; மறந்துவிடாதீர்கள். மாநில நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட அமைப்பாளர்கள் என்று 234 பேரை, தொகுதிக்கு ஒருவர் என்று அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பார்வையாளர்களாக நியமித்துள்ளோம்.

நீங்கள் அனைவரும், பொறுப்பு அமைச்சர்கள்  மாவட்டச் செயலாளர்களைச் சந்தித்து, அவர்கள் ஆலோசனைப்படி பணிகளைத் தொடங்க வேண்டும். இந்தப் பணிகளில் மாவட்டச் செயலாளர்களுக்கு உறுதுணையாக இருந்து, அவர்களின் வழிகாட்டலின்படி, தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு, தொகுதி பார்வையாளர்களான உங்களைத்தான் சாரும்.

அடுத்த ஓராண்டு காலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்குத் தொகுதியை முழுமையாகத் தயார்படுத்தும் பொறுப்பு உங்களுடையதுதான். உங்களுடைய பணிகளில் ஏதாவது உதவி தேவைப்பட்டாலோ, இல்லை சந்தேகம் இருந்தாலோ தலைமைக் கழகத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தொகுதிப் பணியாளராக நியமிக்கப்பட்டுள்ள தொகுதியில், முழுமையாக வெற்றி பெறுவதற்கான வழிவகைகளைக் கண்டறிந்து பணியாற்றுங்கள். உங்கள் மீது தனிப்பட்ட முறையில் எந்தப் புகாரும் சொல்ல முடியாத அளவிற்குப் பணியாற்றுங்கள்.

உங்களின் ஒவ்வொரு அடியும், வெற்றியை நோக்கிய பயணமாக அமைய வேண்டும். இந்தியாவில் எந்த ஆட்சியும் செய்யாத மகத்தான சாதனைகளை நாம் செய்து கொண்டிருக்கிறோம். அதனால்தான், இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு உயர்ந்திருக்கிறது என்று என்னால் நெஞ்சை நிமிர்த்திச் சொல்ல முடியும்.

இந்தச் சாதனைகளை மக்களிடையே பரப்புரை செய்ய வேண்டும். முறையாகப் பரப்புரை செய்யப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும். நம்முடைய திராவிட மாடல் ஆட்சியால் பயனடைந்த மக்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள்.

அவர்களே நமக்கு மிகப்பெரிய பரப்புரையாளர்கள். புதுப்புது பாணிகளைக் கையில் எடுத்து, தேர்தல் பணிகளை முடுக்கிவிட வேண்டிய கடமை உங்களுக்கு உண்டு. கலைஞர் தனக்குப் பிடித்த ஊரின் பெயராக, தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ‘எப்போதும் வென்றான்’ ஊரைச் சொல்வார்.

எப்போதும் வென்றானாக நாம் பெயர் பெற வேண்டும் என்றால், எப்போதும் உழைக்க வேண்டும். எப்போதும் செயல்பட வேண்டும். எப்போதும் பணியாற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்று கேட்டு விடைபெறுகிறேன்” என்று தெரிவித்தார் ஸ்டாலின்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விஜய்யை முந்திய அல்லு அர்ஜுன் !

பின்னணி இசையின் ‘ராஜா’

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share