எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு ‘குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார்’ விருது அறிவிக்கப்பட்டிருப்பதை அறிந்து மகிழ்ச்சியுற்றதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் மறைந்த கன்னட தேசிய கவிஞர் குவெம்பு பெயரில் அமைக்கப்பட்டுள்ள நினைவு அறக்கட்டளை சார்பாக ஆண்டுதோறும் குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார் விருது வழங்கப்படும்.
இந்த ஆண்டு தமிழ் மொழிக்காக எழுத்தாளர் இமையத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 29-ஆம் தேதி நடைபெறும் விழாவில் எழுத்தாளர் இமையத்திற்கு குவெம்பு புரஸ்கார் விருது மற்றும் ரூ.5 லட்சம் காசோலை வழங்கப்பட உள்ளது.
எழுத்தாளர் இமையம் கோவேறு கழுதைகள் நாவல் மூலம் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து 11 நாவல்கள் மற்றும் 2 சிறுகதை தொகுப்புகளை எழுதியுள்ளார். இவரது செல்லாத பணம் என்ற நாவலுக்கு 2020-ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது.
இந்தநிலையில், எழுத்தாளர் இமையத்திற்கு குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார் விருது வழங்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“கருப்பு சிவப்பு கட்டிய கொள்கையாளர் எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு ‘குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார்’ விருது அறிவிக்கப்பட்டிருப்பதை அறிந்து மகிழ்ச்சியுற்றேன். திராவிட இயக்கத்தின் ஆற்றல்மிகு எழுத்தாளர்களின் தொடர்ச்சியான எழுத்தாளர் இமையம் நடைபோடும் பாதையில் புகழ்மாலைகள் பல குவியட்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.
செல்வம்
