பாகற்காயை நினைத்தாலே நம்மவர்களுக்கு கசப்பு உணர்வு ஏற்பட்டு விடும். அதை எந்த முறையில் சமைத்துக் கொடுத்தாலும் ஒதுக்குவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த மிதிபாகல் தண்ணிச்சாறு செய்து கொடுங்கள். இந்த மிதிபாகல் தண்ணிச்சாற்றை சாதத்தில் போட்டுப் பிசைந்தும் சாப்பிடலாம். காலையில் வெறும் வயிற்றிலும் இதைப் பருகலாம். இதனால் சர்க்கரையின் அளவு மட்டுப்படும்; ரத்த அழுத்தம் சீராகும். போனஸாக வயிற்றில் உள்ள பூச்சிகள் அழியும்.
என்ன தேவை? Mithi Pagal Kulambu Recipe
பிஞ்சான மிதிபாகற்காய் – 2 கப்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
புளி – கொட்டைப்பாக்கு அளவு (நீரில் கரைத்துக்கொள்ளவும்)
பொடித்த வெல்லம் – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு ஈர்க்கு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
தாளிக்க…
கடுகு – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
சீரகம் – ஒரு டீஸ்பூன்
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
எப்படிச் செய்வது? Mithi Pagal Kulambu Recipe
அடிகனமான பாத்திரத்தில் ஒரு கப் நீர் விட்டு பாகற்காயை முழுதாக, அப்படியே போட்டு உப்பு, மஞ்சள்தூள், கால் கப் புளிக்கரைசல் ஊற்றி அரைவேக்காடாக வேகவிடவும். வெந்ததும் வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து வெந்த பாகற்காயில் சேர்த்து மீதி உள்ள புளிக்கரைசலை ஊற்றி, தண்ணீரும் சேர்த்து வேகவிடவும். இதனுடன் வெல்லம் சேர்க்கவும். ஓரிரு கொதிகளிலேயே வெந்துவிடும். வெந்தபின் இறக்கி கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை தூவவும்.
