எந்த கட்சிக்கு எத்தனை சீட்?..ஒவ்வொரு கட்சிகளின் வாக்கு சதவீதம்…40 தொகுதி சர்வே ரிசல்ட்!

Published On:

| By Kavi

நாடாளுமன்றத் தேர்தலில் யார் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும்  மின்னம்பலம் மெகா சர்வே நடத்தியது.

ஒவ்வொரு தொகுதியாக யார் வெற்றி பெறப் போகிறார்கள், எந்த கட்சி வேட்பாளர்கள் எத்தனை சதவீத வாக்குகளைப் பெறுவார்கள் என்பதை மின்னம்பலத்தில் ஏற்கனவே வெளியிட்டிருக்கிறோம்.

இப்போது தமிழ்நாடு முழுதும் மொத்தமாக ஒவ்வொரு கூட்டணியும் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுகிறது, எத்தனை வாக்கு சதவீதங்களைப் பெறுகிறது என்பதைப் பார்ப்போம்.

கருத்துக்கணிப்பு நடத்தப்பட்ட முறை

தமிழ்நாட்டில் ஒரு நாடாளுமன்றத் தொகுதி என்பது 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் என்று ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு 600 பேரை சந்தித்து கருத்து கேட்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் உள்ளடங்கிய 234 தொகுதிகளில் 23,400 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

18-30 வயது வரையுள்ள வாக்காளர்கள், 30-50 வயதுள்ள வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என்று மூன்றாகப் பிரித்து ஆண்-பெண் சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பை மின்னம்பலம் நடத்தியது.

மேலும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

எதை முன்வைத்து மக்கள் வாக்களிக்கிறார்கள்?

மக்கள் இந்த தேர்தலில் எதை முன்வைத்து வாக்களிக்கிறார்கள் என்று மின்னம்பலம் கருத்துக்கணிப்பில் தெரியவந்த தகவல் என்னெவென்றால், தமிழ்நாட்டில் 90% மக்கள் இந்த தேர்தலில் மோடி ஆட்சி தொடர வேண்டுமா, வேண்டாமா என்ற கேள்வியுடனேயே வாக்களிக்கச் செல்கிறார்கள்.

பிரதமராக மோடி தொடர வேண்டுமா என்ற கேள்வியை  முன்வைத்து திமுக கூட்டணி களமிறங்கியிருக்கிறது. அதுவே அவர்களின் பலமாகவும் இருக்கிறது.

அதிமுக, தேமுதிக கூட்டணியைப் பொருத்தவரை இந்திய அளவில் யார் பிரதமராக வருவதற்கு ஆதரவு என்று சொல்ல முடியாமல் தடுமாறுவதால், அதிமுகவின் வாக்கு சதவீத ரிசல்ட்டிலும் அந்த தடுமாற்றம் பிரதிபலிக்கிறது.

அதேபோல் அதிமுக, பாஜக இரண்டு கூட்டணிகளும் தமிழ்நாட்டில் ஸ்டாலின் ஆட்சி குறித்தான குற்றச்சாட்டுகளை முன்வைத்துத் தான் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்கள்.

ஆனால் மக்கள் மோடி தொடரலாமா கூடாதா என்பதையே முதன்மை காரணியாக பார்ப்பதால், திமுக ஆட்சியின் மீதான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் பிரச்சாரம் இந்த தேர்தலில்  பெரிதாக எடுபடவில்லை என்பதையே கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்கிறது.

குறைந்த மோடி எதிர்ப்பு அலை

இன்னொரு பக்கம் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மிகப் பெரிய வாக்கு வித்தியாசங்களுடன் மாபெரும் வெற்றியைப் பெற்றதற்கு தமிழ்நாட்டில் மோடி எதிர்ப்பு என்பது பெரும்பான்மையாக இருந்தது முக்கிய காரணமாக அமைந்தது.

அப்போது இருந்ததைக் காட்டிலும் தமிழ்நாட்டில் மோடி எதிர்ப்பு என்கிற அலை குறைந்திருப்பதை இந்த தேர்தலில் கவனிக்க முடிகிறது.

கூட்டணி பலம் யாருக்கு வேலை செய்கிறது?

கூட்டணி பலம் என்பது இந்த தேர்தல் முடிவுகளில் எப்படி வினை புரிந்திருக்கிறது என்பதை மின்னம்பலம் கருத்துக்கணிப்பில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பார்ப்போம்.

திமுக கூட்டணியில் கூட்டணி பலம் என்பது மிக நன்றாக வேலை செய்கிறது. காங்கிரசின் வாக்குகள் திமுகவிற்கு செல்வதும், திமுகவின் வாக்குகள் காங்கிரசுக்கு செல்வதும் எந்த சேதாராமும் இல்லாமல் முழுமையாக நடக்கிறது.

அதேபோல், தலித் வாக்குகளில் பெரும்பான்மையான வாக்குகள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மூலமாக திமுகவிற்கு செல்கிறது.

அதேபோல் திமுகவின் வாக்குகளும் விடுதலை சிறுத்தைகளுக்கு பெரும்பான்மையாகச் செல்கிறது. எல்லா கட்சிகளின் வாக்குகளும் ஒன்றாக சேர்கின்ற ஒரு Perfect Chemistry திமுக கூட்டணிக்கு அமைந்திருக்கிறது என்பதை கருத்துக்கணிப்பில் அறிய முடிகிறது.

இதேபோன்ற கெமிஸ்ட்ரி தான் அதிமுக கூட்டணியிலும் நிலவுகிறது. அதிமுக கூட்டணியைப் பொருத்தவரை அதிமுக மற்றும் தேமுதிக இரு கட்சியின் தொண்டர்களும் மிகத் தீவிரமாக களத்தில் வேலை செய்து வருகிறார்கள்.

அதிமுகவின் வாக்குகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்பு அவர்களிடம் இருப்பதை எல்லா தொகுதிகளிலும் பார்க்க முடிகிறது. எடப்பாடி பழனிசாமியும் ஓரளவிற்கு வசதியான வேட்பாளர்களையே களமிறக்கியிருப்பதால், திமுக அளவிற்கு இல்லையென்றாலும் தாராளமாகவே செலவு செய்து வருகிறார்கள்.

தேமுதிகவில் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் சரிந்த கட்சியின் வாக்குகளை எப்படியாவது அதிகப்படுத்தி முந்தைய நிலைக்கு மீண்டும் கொண்டுவந்துவிட வேண்டும் என்று போராடி வருகிறார்கள்.

தேமுதிக போட்டியிடும் தொகுதிகளில் அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் செலவு செய்து கடுமையாக உழைக்கிறார்கள். அதேபோல் அதிமுக போட்டியிடும் தொகுதிகளிலும் தேமுதிக தொண்டர்கள் இரவு பகல் பாராமல் வேலை செய்து வருகிறார்கள்.

அதேசமயம் பாஜக கூட்டணிக்கு இப்படி ஒரு பொருத்தம் அமையவில்லை என்பதை எல்லா இடங்களிலும் கவனிக்க முடிகிறது. உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் பாமக தலைவர் அன்புமணி ராமதாசின் மனைவி செளமியா அன்புமணி போட்டியிடும் தர்மபுரி தொகுதியில் அமமுகவை காண முடியவில்லை.

அதேபோல் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் போட்டியிடும் தேனியில் பாமக இல்லை. இன்னொரு பக்கம் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிடும் கன்னியாகுமரியில் பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இல்லை.

இதன் காரணமாக பாஜக கூட்டணிக்கு கூட்டணி பலம் என்பது பெரிதாக வேலை செய்யவில்லை. பாமக தொண்டர்கள் அதிமுக கூட்டணியில் இருந்தபோது செய்த களப்பணியை, இப்போது பார்க்க முடியவில்லை.

 

எந்த கூட்டணி எத்தனை தொகுதிகள்?

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் இதோ.

தமிழ்நாட்டு மக்களின் மனதை வென்ற கூட்டணியாக திமுக கூட்டணியே இருக்கிறது.

• தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி நடை போடப் போகிறது என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்கின்றன.

• அதிமுக மற்றும் பாஜக கூட்டணியால் இந்த முறை தமிழ்நாட்டில் வெற்றி எதுவும் பெற இயலாது என்பதே மின்னம்பலம் கருத்துக்கணிப்பின் முடிவாக இருக்கிறது.

• இரண்டாவது இடத்தைப் பொருத்தவரை, பெரும்பான்மையான தொகுதிகளில் அதிமுக கூட்டணி இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறது.

• வேலூர், தர்மபுரி, தேனி, ராமநாதபுரம் ஆகிய 4 தொகுதிகளில் பாஜகவின் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களும், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 2 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களும் இரண்டாம் இடம் பிடிக்கிறார்கள்.

• புதுச்சேரியை காங்கிரஸ் கட்சி மீண்டும் கைப்பற்றுகிறது. பாஜக இரண்டாம் இடம் பெறுகிறது.

வாக்கு சதவீதங்கள்

அடுத்ததாக ஒவ்வொரு கூட்டணியும் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் எவ்வளவு வாக்கு சதவீதங்கள் பெறுவார்கள் என்பதைப் பார்க்கலாம்.

• திமுக கூட்டணி 45.3% சதவீத வாக்குகளைப் பெற்று வாக்கு சதவீதத்தில் முதலிடம் பிடிக்கிறது.

• அதிமுக கூட்டணி 28.3% சதவீத வாக்குகளைப் பெறுகிறது.

• பாஜக கூட்டணி 19.9% சதவீத வாக்குகளைப் பெறுகிறது.

• நாம் தமிழர் கட்சி 5.5% சதவீத வாக்குகளைப் பெறுகிறது.

• 1% சதவீதம் பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி பெருவாரியான வாக்குகளுடன் வெற்றிக் கொடியை நாட்டுகிறது.

மூன்றாவது பெரிய கட்சியாகும் பாஜக

2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணி இல்லாமல் பாஜக மூன்றாவது அணியை பாமக, தேமுதிக, மதிமுக, கொமதேக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து உருவாக்கி போட்டியிட்டது.

அப்போது 18.8% வாக்குகளை அந்த கூட்டணி பெற்றது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது அணியாக பாஜக கூட்டணியின் வாக்கு சதவீதம் 19.9% சதவீதமாக சிறிய அளவிற்கு உயர்வைக் காண்கிறது.

ஆனால் கட்சி அளவில் பாஜக தனியாக 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 5.56% வாக்குகளை வாங்கியது. ஆனால் இந்த முறை தனிப்பட்ட கட்சியாக பாஜகவின் வாக்கு சதவீதம் தமிழ்நாட்டில் 11.71% சதவீதமாக அதிகரிக்கிறது என்பதை கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்கின்றன. பாஜக கூட்டணியில் உள்ள பாமக 4.92% வாக்குகளைப் பெறுகிறது.

யார் யாருக்கு எத்தனை சீட்? கட்சிகளின் வாக்கு சதவீதம்! 40 தொகுதி சர்வே ரிசல்ட்! | DMK | ADMK | BJP

2021 சட்டமன்றத் தேர்தலில் 6.6% வாக்குகளைப் பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக இடம் பெற்றிருந்த நாம் தமிழர் கட்சி இந்த முறை நான்கு முனைப் போட்டியில் நான்காவது இடத்திற்கு செல்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அனுமதி இல்லாமல் விளம்பரம் வெளியிட்ட பாஜகவுக்கு நோட்டீஸ்: சத்யபிரதா சாகு

‘மிஸ்டர் மனைவி’ சீரியலின் புது ஹீரோயின் இவர்தான்… ஷபானாவுக்கு டஃப் குடுப்பாரா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share