தொகுதி மாறத் துடித்த அமைச்சர்கள்:தடுத்த முதல்வர்!

Published On:

| By Balaji

அதிமுக என்றதும் நினைவுக்கு வரும் நபர்களில் ஒருவராகிப் போனவர் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. துணிச்சலாக பேசக்கூடியவர், எந்த தலைவர்களின் பேட்டிக்கும் அதிரடியாக பதில் சொல்லக்கூடியவர் இவர். இதனாலேயே இவரை மறைந்த ஜெயலலிதாவுக்கு எந்தளவுக்கு பிடித்ததோ இப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ரொம்பவே பிடிக்கும்.

கடந்த இரு சட்டமன்ற தேர்தலில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று பத்து ஆண்டுகளாக அமைச்சராகவும் செயல்படுகிறார். சிவகாசி தொகுதியில் பிரச்சனைகள் கொட்டிக்கிடக்கிறது. இதில் ஒன்று சிவகாசி திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம் அமைக்க மக்கள் பல ஆண்டுகளாக போராடியும் கிடைக்கவில்லை. இதுபோன்ற பிரச்னைகள், அமைச்சருக்கு எதிரான சாதி ரீதியான பிரச்சினை அதிகம் என்பதால் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அமைச்சர் கே.டி.ஆர்.ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்து தீபாவளிக்கு முன்பே ராஜபாளையம் நகர ஒன்றிய நிர்வாகிகளிடம் அதிக பாசத்தை வெளிப்படுத்தினார்.

ADVERTISEMENT

தீபாவளிக்கு அனைவருக்கும் அன்பளிப்புகளை தாராளமாக வழங்கினார். விழாக்களுக்கு மட்டுமே ராஜபாளையம் வந்து சென்ற கேடிஆர் கடந்த ஆறு மாதமாக அடிக்கடி வந்தார். கோயில் விழாக்கள், நலிந்த அதிமுக நிர்வாகிகள் என பலருக்கும் தாராளமாக நிதியுதவி வழங்கினார்.பூத் கமிட்டி நிர்வாகிகளை தேர்வு செய்தார். ராஜபாளையம் தொகுதியில் பலரையும் சென்னையில் அம்மா சமாதியை தரிசிக்கக் கூட பஸ் பிடித்து செலவுக்கு பணம் கொடுத்து அனுப்பி வைத்தார்.ராஜபாளையம் மெயின் ரோட்டில் பிரதான இடத்தில் அலுவலகத்திற்கு இடம் தேர்வு செய்தார்.அதிமுக நிர்வாகிகளின் வீட்டில் நல்லது கெட்டதுக்கு தவறாமல் வந்து சென்றார்.

அதிமுக கோட்டை என அழைக்கப்பட்ட ராஜபாளையம் தொகுதி தற்போது திமுக வசம். கேடிஆர் வருகையால் திமுகவினர் தொகுதியை தக்க வைக்க தீவிர களத்தில் இறங்கினர்.

ADVERTISEMENT

இரு நாட்களுக்கு முன் அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் விருப்ப மனு தாக்கல் நடந்தது. முதல்வர் துணை முதல்வர் உட்பட முக்கியமானவர்கள் அவரவர் தொகுதியிலே போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்த நிலையில் சில அமைச்சர்கள் மாற்று தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்ய உள்ள தகவல் முதல்வர் கவனத்திற்கு செல்ல முதல்வர் எடப்பாடியார் அதிரடி உத்தரவை வாய்மொழியாக போட்டார். அமைச்சர்கள் அவரவர் தொகுதியில் தான் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்யவேண்டும். அமைச்சர்களே தொகுதி மாறத்துடித்தால் கட்சி அந்தஸ்து நிலைமை என்னாவது என கடிந்தாராம்.

முதல்வரின் இந்த உத்தரவு யாருக்கு மன உளச்சலை ஏற்படுத்தியதோ அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு ஏற்படுத்தியிருக்கும்.விளைவு ராஜபாளையத்தில்பிப் 24இல் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை அமைச்சர் தலைமையில் கோலாகலமாக கொண்டாட திட்டமிட்டிருந்த நிகழ்வுக்கு அமைச்சர் வருகை ரத்தாகிப்போனது. இருந்தாலும் விருதுநகர்

ADVERTISEMENT

மாவட்ட அதிமுகவின் செல்லப்பிள்ளை ராஜபாளையத்திலேயே கண்டிப்பாக போட்டியிடுவார் என அவரது உண்மை விசுவாசிகள் தெரிவிக்கின்றனர்.

**சக்தி பரமசிவன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share