அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு மீது பதிலளிப்பதற்கு அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.
அமலாக்கத் துறையால் கடந்த ஜூன் 14 ஆம் தேதி சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி… காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். நேற்று முன் தினம் கூட அவரது கால்கள் மரத்துப் போனதால் திடீரென ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டும் சிறைக்குத் திரும்பினார்.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை இரு முறை நிராகரித்துவிட்ட நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தனது உடல் நிலை காரணமாக ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று (அக்டோபர் 10) மனு தாக்கல் செய்தார்.
“இதய பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின் இன்னமும் முழுமையாக குணமடையவில்லை. சிறையில் இருந்தவாறு சிகிச்சை பெறுவதில் சிரமம் உள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ முறையிட்டார்.
இதனை ஏற்று செந்தில் பாலாஜியின் மனுவை நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று (அக்டோபர் 11) பிற்பகல், விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். செந்தில்பாலாஜி தரப்பில் அவரது உடல் நலம் குறித்த மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அமலாக்கத்துறை தரப்பில் சிறப்பு பிபி என்.ரமேஷ் ஆஜரானார். செந்தில்பாலாஜி தரப்பில் உடல் நிலை கருதி மட்டுமே ஜாமீன் கேட்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து அமலாக்கத்துறை வழக்கறிஞர், ‘எங்களுக்கு முடிவெடுக்க கால அவகாசம் வேண்டும்’ என்று கேட்டார்.
இதையடுத்து செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு மீது பதில் மனு தாக்கல் செய்ய, அக்டோபர் 16 ஆம் தேதி வரை அமலாக்கத்துறைக்கு கால அவகாசம் வழங்கி விசாரணையை தள்ளி வைத்தார் நீதிபதி ஜெயச்சந்திரன்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
ICC WorldCup: டிரெண்டிங்கில் விராட்கோலி – நவீன் உல் ஹக்… மீண்டும் மோதல்?