ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தவறான செய்தியை பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தான் இயங்க வேண்டும் என்றும் சென்னைக்குள் வரக்கூடாது என்றும் போக்குவரத்து துறை தெரிவித்திருந்தது. ஆனால் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் அதற்கு மறுப்பு தெரிவித்தது. இதனால் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்திற்கு முன்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தென் தமிழ்நாட்டில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகளை அதிகாரிகள் கிளாம்பாக்கத்திலேயே தடுத்து நிறுத்தி வருகின்றனர்.
தற்போது ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று (ஜனவரி 25) கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர்,
“ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நடைமேடை அருகில் வந்துதான் பயணிகளை இறக்கி விட வேண்டும்.
அப்போது தான் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கான பேருந்துகளை தேடி செல்வதற்கு வசதியாக இருக்கும். இங்கே பயணிகளை இறக்கிவிட்டு காலியாக செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டிற்கு செல்ல கூடாது. ஆம்னி பேருந்துகளுக்கான பணிமனைகளுக்கு செல்ல வேண்டும்.
இது தொடர்பாக அதிகாரிகளும் தொடர்ந்து சோதனை மேற்கொள்வார்கள். அதே போல கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வருகின்ற பயணிகள் பயன்படுத்துவதற்கு சிஎம்டிஏ சார்பாக 1,500 ஆட்டோக்கள் நிறுத்தி வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 200 கால் டாக்சி நிறுத்துவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. 300 ஓலா, ஊபர் வாகனங்களும் பயன்பாட்டிற்கு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், குறிப்பாக ஒரு சங்கத்தை சேர்ந்தவர்கள் இங்கே பார்க்கிங் வசதி இல்லை என்று தேவையில்லாமல் சொல்லி வருகிறார்கள். இன்றைக்கு இங்கு 300 ஆம்னி பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒரு தவறான செய்தியை மக்களிடத்தில் பரப்பக் கூடாது என்பதற்காக தான் நான் இதை வலியுறுத்துகிறேன்.
இது போன்று பேசி வருபவர்கள் இங்கு எவ்வளவு ஆம்னி பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை பார்த்து விட்டு உங்கள் கருத்தை தெரிவிக்கலாம். இன்னும் சொல்லப்போனால் மக்களிடத்தில் தவறான செய்திகளை பரப்பி வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் சூழல் வரும் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 27 முன்பதிவு அலுவலகம் வைப்பதற்கும் ஆம்னி பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் 5000 சதுர அடி தான் ஆம்னி பேருந்துகளுக்காக இடம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இங்கே கூடுதலாக 2000 சதுர அடி என மொத்தமாக 7000 சதுர அடி முன்பதிவு அலுவலகம் வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதே போல பயணிகளுக்கும் கோயம்பேட்டை விட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பல்வேறு கூடுதல் வசதிகள் உள்ளது. எனவே இங்கிருந்து பயணிப்பது அவர்களுக்கும் வசதியாக இருக்கும்.
எனவே ஓரிரு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தேவையில்லாமல் பேட்டிக் கொடுப்பதை விடுத்துவிட்டு குழப்பம் ஏற்படுத்தாமல் இங்கிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அதே போல மேற்கொண்டு பார்க்கிங் வசதி செய்ய வேண்டும் என்பதற்காக சிஎம்டிஏ துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. முடிச்சூரில் பார்க்கிங் வசதி என்பது மார்ச் மாத இறுதிக்குள் தயாராகிவிடும். அதுவரை கிளாம்பாக்கத்திலேயே பேருந்துகளை நிறுத்துவதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
INDvsENG 1st Test : முதல்நாளில் இந்தியா ஆதிக்கம்!
உங்கள் மாநிலத்தில் என்ன ரியாக்ஷன்? ராமர் கோயில் பற்றி மத்திய அமைச்சர்களிடம் கேட்ட மோடி