காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரில் 100 படுக்கைகள் கொண்ட இ.எஸ்.ஐ மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் ஷோபா கராந்த்லாஜே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று (நவம்பர் 25) தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளே தனது தொகுதியான திருப்பெரும்புதூரில் இ.எஸ்.ஐ மருத்துவமனை எப்போது கட்டப்படும் என்று நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் மக்களவை திமுக குழுவின் தலைவருமான டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியிருந்தார்.
இதுதொடர்பாக டி.ஆர்.பாலு, “சென்னை இருங்காட்டுக்கோட்டையை அடுத்த படப்பை, திருப்பெரும்புதூர், உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான கனரக, நடுத்தர மற்றும் சிறு – குறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்தத் தொழிற்சாலைகளில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் அவர்களுடைய குடும்பத்தினருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை வசதிகள் உரிய முறையில் பெற வேண்டியதைக் கருத்தில் கொண்டு திருப்பெரும்புதூரில் மருத்துவமனையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதா?
அப்படி என்றால் அதன் முழு விவரங்கள் என்ன? மருத்துவமனை அமைத்திடும் திட்டம் ஏதும் இல்லை என்றால் அதற்கான காரணம் என்ன? மருத்துவமனை வசதிகள் அமைப்பதில் தாமதமாவதற்கு என்ன காரணம் ?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்தக் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் ஷோபா கராந்த்லாஜே,
“திருப்பெரும்புதூரில் 100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையை உடனடியாக அமைக்க இ.எஸ்.ஐ. நிறுவனம் முடிவெடுத்துள்ளது. 178 கோடி ரூபாயில் மருத்துவமனை வசதிகள் உருவாக்கப்படும். இது தொடர்பாக உரிய நிதி அனுமதி இ.எஸ்.ஐ. நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுவிட்டது.
மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் மத்திய பொதுப்பணித் துறையின் பொறுப்பில் விடப்பட்டு அதற்கான ஆணையும் தரப்பட்டுள்ளது. மருத்துவமனை கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லையா? – விஜய்க்கு கீதா ஜீவன் பதிலடி!
வார்னருக்கு இந்த நிலையா? 2 கோடினு வச்சும் யாரும் மணி அடிக்கலையே!
