செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதில் சட்டசிக்கல் இல்லை என்று திமுக வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜியை தமிழக அரசு இலாகா இல்லாத அமைச்சராக நியமித்த உத்தரவை எதிர்த்தும் அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க உத்தரவிடக்கோரியும் அதிமுக முன்னாள் எம்.பி ஜெயவர்தன், வழக்கறிஞர் எம்.எல்.ரவி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி அமர்வு, “செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் வைத்திருப்பது குறித்து முதல்வர் முடிவெடுக்க வேண்டும். இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதால் எந்த பயனும் இல்லை. நிர்வாக தூய்மைக்கும் அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கும் இது ஏற்றதாக இல்லை. செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் வைத்திருப்பது தார்மீக அடிப்படையில் சரியானதல்ல” என்று தெரிவித்தார்.
தீர்ப்பு குறித்து திமுக வழக்கறிஞர் சரவணன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “அமைச்சரவையில் யார் யார் இடம்பெற வேண்டும் என்ற அதிகாரம் முதல்வர் ஸ்டாலினுக்கு தான் உள்ளது. செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு எந்தவித தகுதி குறைபாடும் கிடையாது. அதில் எந்த சட்டச்சிக்கலும் இல்லை. அந்த நிலைப்பாட்டைச் சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. செந்தில் பாலாஜி அரசியல் காரணங்களுக்காக அமலாக்கத்துறையால் கைது செய்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பல வழக்குகள் உள்ளது. குட்கா வழக்கில் விஜயபாஸ்கரை கைது செய்தார்களா. செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது அரசியல் சார்ந்த முடிவாக தான் இருக்கும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
இந்தியா என்ற பெயர் பெருமை தரவில்லையா? – சேவாக்கிற்கு விஷ்ணு விஷால் கேள்வி!
பாரததேசம் என்று தான் பாரதியார் சொன்னார்: தமிழிசை சவுந்தரராஜன்