“ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகளை ஒன்றிணைக்க ஆதார் எண் பெறப்பட்டதா?”: செந்தில் பாலாஜி விளக்கம்!

Published On:

| By Selvam

ஒரே வீட்டில், ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகள் ஒன்றிணைக்கவே ஆதார் எண் பெறப்படுகிறது என்பது முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்கு புறம்பானது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் உதவிமின் பொறியாளர் கிருஷ்ண மூர்த்தி, கடந்த மார்ச் 3-ஆம் தேதி மின் நுகர்வோர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

“தங்களது வளாகத்திலுள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டு உபயோக மின் இணைப்புகளை ஒரே மின் இணைப்பாக இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆகவே தங்களது மின் இணைப்புகளை ஒரே மின் இணைப்பாக இக்கடிதம் கிடைக்கப்பெற்ற 15 தினங்களுக்குள் மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.” என்று தெரிவித்திருந்தார்.

minister senthil balaji clarifies

இந்த கடிதம் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது. இந்தநிலையில், ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டு உபயோக மின் இணைப்புகளை ஒரே மின் இணைப்பாக இணைக்க எந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.

சம்பந்தப்பட்ட உத்தரவு பிறப்பித்த அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அறிக்கையை செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மான கழகத்தில்‌ இதுவரை 99 விழுக்காட்டிற்கும்‌ மேல்‌ வீடு, குடிசை மற்றும்‌ விவசாய மின் இணைப்புடன்‌ ஆதார்‌ எண்ணை இணைக்கும்‌ பணியானது வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

‘இந்நிலையில்‌, கடந்த சில நாட்களில்‌ சமூக வலைதளங்களில்‌, ஒரே வீட்டில்‌, ஒரே நபரின்‌ பெயரில்‌ உள்ள ஒன்றிற்கும்‌ மேற்பட்ட வீட்டு மின்‌ இணைப்புகள்‌ ஒன்றிணைக்கப்படுவதற்காகவே ஆதார்‌ எண்‌ பெறப்பட்டு மின் இணைப்புடன் இணைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது என்ற கருத்து பதியப்பட்டு பரவி வருகிறது. இந்த கருத்து முற்றிலும்‌ தவறானது மற்றும்‌ உண்மைக்கு புறம்பானது ஆகும்‌.

minister senthil balaji clarifies

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்‌ கடந்த 09.09.2022 அன்று வெளியிடப்பட்ட வீதப்பட்டியல்‌ மாற்ற ஆணையின்‌ சரத்துக்களின்படி, கள ஆய்வின்‌ அடிப்படையில்‌ ஒரே வீட்டில்‌/குடியிருப்பில்‌, ஒரே நபரின்‌ பெயரில்‌, ஒரு குடும்பத்தினரே உபயோகிக்கும்‌ ஒன்றிற்கும்‌ மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகளை ஒன்றிணைக்க அல்லது அத்தகைய கூடுதல்‌ மின் இணைப்புகளைப்‌ பொதுப்பயன்பாட்டிற்கான மின் இணைப்பாக மாற்ற உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும்‌, சில நிர்வாக காரணங்களால்‌ மேற்படி ஒன்றிணைப்பு/வீதப்பட்டியல்‌ மாற்றும்‌ பணி தொடங்க கூடுதல்‌ கால அவகாசம்‌ கோரப்பட்டுள்ளது.

எனவே இதுதொடர்பாக எந்த ஒரு செயல் உத்தரவும் மின் பகிர்மான வட்டங்களில் உள்ள பிரிவு அலுவலகங்களுக்கு பிறப்பிக்கப்படவில்லை. எனினும் இக்குறிப்பிட்ட கள ஆய்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பிரிவு அலுவலரின் கடித வரைவு செயல், ஒரு தனிப்பட்ட நிகழ்வு ஆகும். இதில் சம்பந்தப்பட்ட அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

கோடைக்கால மின் தேவைக்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன?

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share