நீர்வளம் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று பத்திரிகையாளர்களிடம் ”முதல்வரை சந்திக்க சென்றேன். அவர் ஒரு விழாவிற்கு சென்று விட்டார். மீண்டும் சந்திக்க நேரம் கேட்டேன். கால் வலி ஓய்வெடுக்கிறார் என்றார்கள்.
அவரை சந்திக்கவில்லை” என்று தெரிவித்தார். உண்மை என்னவென்றால் அவர் முதல்வரை சந்தித்து நீண்ட நேரம் பேசிவிட்டு வந்து தான் சந்திக்கவேயில்லை என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
துரை முருகன் மறைக்ககூடிய அளவிற்கு அந்த சந்திப்பில் என்ன தான் நடந்ததாம்?
முதல் நாள் இரவே திருநெல்வேலியில் துரைமுருகன் இருந்தபோது அவரிடம் இருந்து சுரங்கதுறையை முதல்வர் மாற்றப் போகிறார் என்ற தகவல் அவருக்கு கிடைத்தது. ஆரம்பத்தில் அப்படியெல்லாம் இருக்காதுயா என்று சொன்னவர் நேற்று காலையில் அப்படி தான் இருக்கும்போல என்று சொல்ல ஆரம்பித்தார்.
அதனால் நேருக்கு நேர் முதல்வரிடமே கேட்டுவிடலாம் என்று வீட்டிற்கு சென்றார். முதல்வரோ “நிதித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசுவை போடலாம்னு இருக்கேன். நாசரை அமைச்சரவையிலிருந்து எடுத்துட்டு டிஆர்பி ராஜாவை அமைச்சராக்கியிரலாம்னு இருக்கேன்.
உங்களிடம் இருக்கும் சுரங்கத்துறைக்கு பதிலாக சட்டத்துறை தரலாம் என்று நினைக்கிறேன். உங்களால் சுரங்கத்துறையை மேனேஜ் பண்ண முடியவில்லை என்று சொல்கிறார்கள்.
உங்களுக்கு சிரமம் குடுக்க வேண்டாம் என்று தான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
உடனே துரை முருகன் “ எனக்கு மேனேஜ் பண்ணுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. ரொம்ப ஈசியா தான் இருக்கு. எனக்கு உடம்பும் நல்லா இருக்கு. நீங்க அதப் பத்தி கவலைப்பட வேண்டாம். இப்ப நாசர அமைச்சரவையிலிருந்து எடுக்குறீங்க அவர் மேல ஏகப்பட்ட புகார்னு சொல்றீங்க. தியாகராஜனையும் இலாகா மாத்துறீங்க.
அவர் பேசியதுக்கு அது சரி தான். இந்த நேரத்துல சுரங்கத்துறையை எங்கிட்ட இருந்து எடுத்தீங்கனா நான் ஏதோ பெருசா தப்பு பண்ணிட்டேனு கட்சிக்காரன் கூட பேசுவான்.
இந்த சூழல்ல என் துறையை மாத்துறது தேவை இல்லாத விமர்சனங்கள எழுப்பும். அத தான் நான் யோசிக்கிறேன். மத்தபடி உங்க முடிவு தம்பி” என தெரிவித்திருக்கிறார்.
”அப்பிடினா வேணாம். உங்களால மேனேஜ் பண்ண முடியலைனு சொன்னதால நான் இதை கேட்டேன். சரி அப்படியே இருக்கட்டும்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்ததாக தகவல்கள் வருகின்றன.
இது நேற்று மதியம் நடந்த சந்திப்பும் அதில் நடந்தவைகளும் ஆகும். இன்று காலை முதல்வர் வீட்டில் இலாகா மாற்றம் தொடர்பாக குடும்பத்தினர் ஆலோசனை நடத்தியிருக்கின்றனர்.
அதில் பேசப்பட்ட விஷயங்கள் கிடைத்தவுடன் வாசகர்களுக்கு தெரிவிக்கின்றோம்.
வேந்தன்
தங்கம் விலை உயர்ந்தது: இன்றைய விலை நிலவரம்!
