கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகேயுள்ள காராமணிகுப்பத்தில் அமைச்சர் பொன்முடி சென்ற கார் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
திமுக இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று கடலூர் தேரடி வீதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சி முடிந்து இரவு 8.30 மணியளவில் தனது சொந்த ஊரான விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அவரது கார் கடலூர் நெல்லிக்குப்பம் அருகேயுள்ள காரமணி குப்பம் சந்தை பகுதியை கடந்து சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த நடுவீரன்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஜோதி என்பவர் படுகாயமடைந்தார்.
அவரை அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஜோதி சிகிச்சை பெற்று வருகிறார். அமைச்சர் பொன்முடி இந்த விபத்தில் காயம் எதுவும் ஏற்படாமல் உயிர்தப்பினார். தொடர்ந்து அவர் தனது காரிலேயே விழுப்புரம் நோக்கி சென்றார்.
இந்த விபத்து குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செல்வம்