வைஃபை ஆன் செய்ததும் உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீனுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை பற்றிய செய்திகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது,.
“இன்று (ஏப்ரல் 23) சென்னை உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தின் வெவ்வேறு உத்தரவுகள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, செந்தில்பாலாஜி ஆகியோருக்கு எதிரானதாக அமைந்திருக்கின்றன. Minister Or Bail Supreme Court Senthil Balaji
துரைமுருகன் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது செல்லாது, பொன்முடியின் வெறுப்பு பேச்சு அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை… இவற்றைத் தாண்டி உச்ச நீதிமன்றம் அமைச்சர் செந்தில்பாலாஜிக்குப் பிறப்பித்துள்ள உத்தரவுதான் திமுக தலைமையில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டாலின் அமைச்சரவையில் முக்கியமான அமைச்சராக இருக்கும் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சுமார் ஒரு வருடத்துக்கும் மேல் சிறையில் இருந்தார். கடந்த 2024 செப்டம்பர் 26 ஆம் தேதி அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்த நிலையில், அடுத்த இரு நாட்களில் அதாவது செப்டம்பர் 29 ஆம் தேதி மீண்டும் அமைச்சராக பதவியேற்றார்.
அதன் பின் செந்தில்பாலாஜி அமைச்சராக இருப்பதால் அவரது வழக்கில் சாட்சிகள் தைரியமாக சாட்சி சொல்ல முன் வரத் தயங்குகிறார்கள். எனவே செந்தில்பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வித்யா குமார் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து விசாரணையில் இருக்கிறது. கடந்த மார்ச் 24 ஆம் தேதி, ‘செந்தில்பாலாஜி அமைச்சராக இருப்பது சரி என்று நினைக்கிறாரா?’ என்ற கேள்வி கேட்ட உச்ச நீதிமன்றம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து ஏப்ரல் 8 ஆம் தேதி செந்தில்பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அபிடவிட்டில், ‘நான் அமைச்சராக இருப்பதற்கும் ஜாமீன் வழங்கப்பட்டதற்கும் எந்த முரண்பாடும் இல்லை. ஜாமீன் நிபந்தனைகளில் நான் அமைச்சராக பதவியேற்கக் கூடாது என்று சொல்லப்படவில்லை. மேலும் சாட்சிகள் பற்றி பொதுவான புகார்களையே சொல்லியிருக்கிறார்கள். குறிப்பிட்டு எதுவும் இல்லை. எனவே எனது ஜாமீனுக்கு எதிரான மனு விசாரணைக்கே உகந்தது இல்லை’ என்று குறிப்பிட்டிருந்தார். Minister Or Bail Supreme Court Senthil Balaji
இந்நிலையில் இந்த வழக்கு இன்று ( ஏப்ரல் 23) விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘செந்தில்பாலாஜிக்கு சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் மெரிட் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்படவில்லை. விசாரணையில் தாமதம் மற்றும் நீண்ட சிறைவாசம் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே ஜாமீன் வழங்கப்பட்டது “ என்ற நீதிபதி ஓகா, அமைச்சர் செந்தில்பாலாஜியின் வழக்கறிஞர் முகுல் ரோகத்கியைப் பார்த்து,
’உங்கள் கட்சிக்காரர் அமைச்சராக இருக்க விரும்புகிறாரா அல்லது ஜாமீனில் இருக்க விரும்புகிறரா? இரண்டில் ஒன்றைதான் தேர்வு செய்ய முடியும்’ என்று கூறினார்.
அப்போது செந்தில்பாலாஜிக்காக ஆஜரான இன்னொரு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘செந்தில்பாலாஜி அமைச்சராக இருப்பதால், அவரது செல்வாக்கு குறித்த அச்சம் இருந்தால் வழக்கு விசாரணையை தமிழ்நாட்டுக்கு வெளியே வேறு மாநிலத்திற்கு மாற்றலாம் என்று கூறினார்.
ஆனால் நீதிபதி ஓகா, ‘இவ்வழக்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாட்சிகள் இருக்கிறார்கள். எனவே இது சரிப்பட்டு வராது… ‘ என்று உடனடியாக கூறிவிட்டார். ‘ ‘
கபில் சிபல், மீண்டும் செந்தில்பாலாஜியால் சாட்சிகள் எந்த வகையிலும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறினார். அப்போது நீதிபதி ஓகா, “அவர்கள் சாட்சி சொல்ல வருவதையே நீங்கள் தடுக்கிறீர்கள்” என பதிலளித்தார்.

அப்போது கபில் சிபல் இன்னும் ஒரு வாதத்தை முன் வைத்தார். ‘அந்த வழக்கின் சம்மன் உத்தரவுகள் ஜனவரி 2026 க்குப் பிறகுதான் முடிவடையும். அதன் பின் விசாரணை தொடங்கும் நேரத்தில், தற்போதைய மாநில அரசின் பதவிக்காலம் முடிவடைந்திருக்கும். எனவே செந்தில்பாலாஜி விசாரணையில் செல்வாக்கு செலுத்துவார் என்ற கேள்வியே இல்லை’ என்று அவர் கூறினார்.
அதாவது, ‘மீண்டும் திமுக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வராது. எனவே செந்தில்பாலாஜியால் இவ்வழக்கில் செல்வாக்கு செலுத்த முடியாது; என்பதுதான் கபில் சிபலின் வாதம். ஆனால் உச்ச நீதிமன்றமோ தேர்தல் முடிவுகளை கணிக்க முடியாது என்று கூறிவிட்டது.
’ஜாமீன் மீதான உச்ச நீதிமன்றத்தின் தாராள நிலைப்பாட்டை செந்தில்பாலாஜி தவறாக பயன்படுத்துவது கவலையளிக்கிறது. செந்தில்பாலாஜி அமைச்சராக இருக்க வேண்டுமா அல்லது ஜாமீனில் வெளியே இருக்க வேண்டுமா? திங்கள் கிழமைக்குள் சொல்லுங்கள்’ என்று உத்தரவிட்டு விசார்ணையை ஒத்தி வைத்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் திமுக தலைமையில் தீவிர சட்ட ஆலோசனை நடந்துகொண்டிருக்கிறது. செந்தில்பாலாஜி அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்வதுவிடுவதே, நிலைமையை மோசமாக்காமல் இருக்கும் என்று முதல்வரிடம் ஆலோசனைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. தீர்ப்புக்குப் பின் செந்தில்பாலாஜியும் தனது வழக்கறிஞர்களிடம் பேசியிருக்கிறார். முதலமைச்சர் ஸ்டாலின் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு திமுகவுக்குள்ளும் அரசியல் வட்டாரங்களிலும் எழுந்துள்ளது. Minister Or Bail Supreme Court Senthil Balaji

ஏற்கனவே துணை முதல்வர் உதயநிதி கோவையில் செந்தில்பாலாஜியின் நிகழ்வை தவிர்த்ததே திமுகவுக்குள் பெரும் பேசுபொருளானது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருவதற்குள் செந்தில்பாலாஜியை ராஜினாமா செய்யுமாறு முதல்வர் கேட்டுக் கொள்வார் என்பதுதான் இப்போது திமுக வழக்கறிஞர்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் விஷயம்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
