ரேஷன் கடைகளில் அனைத்து காலி பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமி நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பணியிலிருந்த ஊழியரிடம் ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்தும், எத்தனை கார்டுகளுக்கு வழங்கப்படுகிறது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
ரேஷன் கடையில் உள்ள பயோமெட்ரிக் மெஷினையும் ஆய்வு செய்தார்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ரேஷன் கடை ஊழியர்களுக்கான காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், நியாய விலை கடைகளில் அனைத்து அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருட்களை முழுமையாக வழங்க பணிகள் நடந்து வருகிறது. கொரோனா நிவாரண நிதி அனைத்துக் கடைகளிலும் 100 சதவிகிதம் வழங்கப்படும். பொருட்களின் தரத்தையும், அளவையும் இன்று (நேற்று) ஆய்வு செய்தேன். இதுபோன்று தமிழகம் முழுவதும் ஆய்வு நடத்தப்படும்.
அனைத்து ரேஷன் கடைகளிலும் 30 நாட்களும் பொருட்கள் வழங்கப்படும். ரேஷன் கடை பணியாளர்களின் காலியிடங்கள் விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
**-பிரியா**
