“அதிமுக ஆட்சியில் இடிந்து விழுந்த 7 பாலங்கள்” – எடப்பாடிக்கு அமைச்சர் வேலு பதிலடி!

Published On:

| By Selvam

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, அகரம்பள்ளிப்பட்டு- தொண்டமானூர் இடையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே திமுக அரசால் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

இதனையடுத்து, “திமுக ஆட்சியில் கட்டப்படுகிற பாலங்கள் எவ்வளவு தரமற்று கட்டப்படுகிறது என்பதற்கு இந்த நிகழ்வே சாட்சி” என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார்.

ADVERTISEMENT

இந்தநிலையில், “எடப்பாடி ஆட்சியில் மட்டும் 7 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு உடனே இடிந்து விழுந்தது” என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று (டிசம்பர் 4) பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ADVERTISEMENT

“மக்களுக்கு விடியும் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, 1,505 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. மேலும், 328 பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது.

விடியாத எடப்பாடி ஆட்சியில் முடிக்காமல் விட்டு சென்ற, நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த 38 ரயில்வே மேம்பாலங்கள் திமுக ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டது.

ADVERTISEMENT

எடப்பாடி ஆட்சியில் மட்டும் 7 பாலங்கள் கட்டி உடனே இடிந்து விழுந்த வரலாறும் உண்டு, கட்டும் போதே இடிந்த கடலூர் சிங்காரதோப்பு பாலமும் உண்டு.

விழுப்புரம் தளவானூர் தடுப்பணையும் இடிந்து விழுந்தது உண்டு, உதாரணத்திற்கு, என்னுடைய மாவட்டத்திலேயே அம்மாபாளையத்தில் – நாகநதியின் குறுக்கே கட்டப்பட்ட பாலமும், படவேடு – இராமர் கோயில் சாலையில் கமண்டலநதி மேல் கட்டப்பட்ட பாலமும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதை எங்கள் மாவட்ட மக்கள்
மறவமாட்டார்கள்.

ஆனால், இதையெல்லாம் மறந்து எதிர்கட்சி தலைவர் தன் இருப்பிடத்தை காட்டிக்கொள்ள ஈரை பேன் ஆக்க முயற்சிக்கிறார்.

உண்மை நிலை என்ன?

ஃபெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத வகையில் பெய்த அதீத கன மழையினால், சாத்தனூர் அணையிலிருந்து வழக்கமாக வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை விட நான்கு மடங்கு அதிகமாக அதாவது 1,75,000 கனஅடிக்கு மேல் அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

தொடர் மழையினால் கீழ்பகுதியில் பாம்பாறு, வரட்டாறு, நீர்பிடிப்பு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளநீரும், மற்றும் குளங்களிள் நிரம்பி வெளியேறிய உபரிநீரும் மொத்தம் சேர்ந்து இப்பாலத்தில் அதிகப்படியான வெள்ள பெருக்கு ஏற்பட்டது.

பாலத்தின் மேற்பரப்பிற்கு மேல் சுமார் 4 மீட்டர் உயரத்திற்கு நீரின் வேகம் அதிகரித்து ஓடியதால் இப்பாலம் பெரும் சேதமடைந்தது. இந்த பாலத்தின் நீர் வெளியேற்றும் திறன் வினாடிக்கு 54,000 கன அடி தான், “எதிர்பாராத பேரிடர்” காரணமாக அதிக வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் பாலம் உடைப்பட்டது.

திமுக ஆட்சியில் சாலைகள், பாலங்கள் தரம் வாய்ந்ததாக கட்டப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நிலையிலும் தரக்கட்டுபாடு பொறியாளர்கள் தரத்தினை சோதிக்கின்றனர்.

முதலமைச்சராக, நெடுஞ்சாலைத் துறையையும் பொறுப்பில் வைத்திருந்த எடப்பாடியாருக்கு இந்த ஆட்சியினை குறை கூற எவ்வித தார்மீக உரிமையும் இல்லை” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சாதிவாரிக் கணக்கெடுப்பு… தடை போடும் பாஜக – சமூக நீதி மாநாட்டில் ஸ்டாலின் காட்டம்!

22 அரசு பேருந்துகளுக்கு அபராதம் : பழிவாங்கும் நடவடிக்கையா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share