எங்கள் ஆட்சி கலைய வாய்ப்பே இல்லை. கண்டிப்பாக இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும். தேர்தல் வந்தாலும் அதை சந்திக்கும் ஆற்றல் எங்களுக்கு உள்ளது என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று (ஜூன் 9) ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு 2,500 முதல் 3,000 நோயாளிகள் வரை வருகின்றனர். இங்குள்ள இதயவியல் துறைக்குக் கூடுதலாக மருத்துவர்கள் தேவைப்படும் நிலை உள்ளது. எனவே, மருத்துவர்களின் எண்ணிக்கையை உயர்த்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
மின்தடை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “மருத்துவமனையில் மின்சாரத்தால் இயங்கக்கூடிய மருத்துவக் கருவிகள் பல உள்ளன. எனவே, இங்கு மின்தடை ஏற்படாமல் இருக்க மின்வாரியத்துடன் பேசி வருகிறோம். ஒருவேளை மின்தடை ஏற்படும் சமயங்களில், தடையின்றி இயங்குவதற்குத் தேவையான ஜெனரேட்டர் வசதிகளைச் செய்வதற்கான நடவடிக்கைகளையும் தற்போது மேற்கொண்டு வருகிறோம்,” என்று கூறினார்.
மூன்று மாதங்களில் தவெக ஆட்சி கலைந்துவிடும்’ என்று முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பேசியதாக வெளியான செய்தி குறித்த கேள்விக்கு, “எங்கள் ஆட்சி கலைய வாய்ப்பே இல்லை; கண்டிப்பாக இந்த ஆட்சி ஐந்து ஆண்டுகள் முழுமையாக நீடிக்கும். ஒரு வேளை அப்படி நடந்தால், தேர்தலை சந்திக்க த.வெ.க. தயாராக உள்ளது. தி.மு.க. தயாராக உள்ளதா. எங்கள் ஆட்சி கலைய வாய்ப்பே இல்லை. கண்டிப்பாக இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும். ஒருவேளை எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்கும் ஆற்றல் எங்களுக்கு உள்ளது. மீண்டும் தேர்தலை சந்திக்கும் துணிச்சல் அவர்களுக்கு உள்ளதா.” என்று கேள்வி எழுப்பினார்.
