அக்டோபர் 7 ஆம் தேதியில் இருந்து பாலஸ்தீனத்தின் காசா நகரத்தின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. காசாவில் இருந்து ஹமாஸ் தீவிரவாத அமைப்பினர் நடத்திய ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் தாக்க ஆரம்பித்து ஒரு மாதம் ஆகப் போகிறது. ஆயிரக்கணக்கானோர் இதில் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்,
இந்த நிலையில் காசா மீது அணுகுண்டு வீசுவதற்கான சாத்தியக் கூறு இருப்பதாக இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் கூறியிருப்பது உலகம் முழுமையும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தலைவரும் அந்நாட்டின் பண்பாட்டுத் துறை அமைச்சருமான அமிஹாய் எலியாஹு, அந்நாட்டு வானொலியான ரேடியோ கோல் பெராமாவுக்கு இன்று (நவம்பர் 5) அளித்த பேட்டியில், காசா மீது அணுகுண்டு வீசப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு… “காசா மீது அணுகுண்டு வீசுவது என்பது சாத்தியக்கூறுகளில் ஒன்றாகும்” என்று கூறினார். மேலும், “காசாவுக்குள் மனிதாபிமான உதவிகளை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அங்கே பொதுமக்களே இல்லை” என்றெல்லாம் கூறினார்.
ஏற்கனவே போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று ஐ.நா. உள்ளிட்ட பல உலக நாடுகள் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில். காசா மீது அணுகுண்டு வீச சாத்தியம் உள்ளது என்று இஸ்ரேலிய அமைச்சரே சொன்னது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Prime Minister Benjamin Netanyahu:
Minister Amihai Eliyahu's statements are not based in reality. Israel and the IDF are operating in accordance with the highest standards of international law to avoid harming innocents. We will continue to do so until our victory.
— Prime Minister of Israel (@IsraeliPM) November 5, 2023
இதனால் நெருக்கடிக்கு உள்ளான இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு, “அமைச்சர் அமிஹாய் எலியாஹுவின் கருத்துகள் யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. அப்பாவிகளுக்கு தீங்கு விளைவிப்பதைத் தவிர்ப்பதற்காக இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை ஆகியவை சர்வதேச சட்டத்தின் மிக உயர்ந்த தரத்தின்படி செயல்படுகின்றன. எங்களின் வெற்றி வரும் வரை அதைத் தொடர்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அமைச்சரவைக் கூட்டங்களில் இருந்து அணுகுண்டு அமைச்சரை இடைநீக்கம் செய்தார் பிரதமர்.
இதற்கிடையே இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் க்விரின், “ஹமாஸ் பயங்கரவாதக் குழுவிற்கு எதிரான போரை வழிநடத்தும் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட போர் அமைச்சரவையுடன் அமைச்சர் எலியாஹு எந்தத் தொடர்பும் கொண்டிருக்கவில்லை. அதனால் அவரது கருத்தை பொருட்படுத்த வேண்டாம்” என்று கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இதற்கிடையில் அமைச்சர் எலியாஹு, “காசா மீது அணுகுண்டு வீசுவது” பற்றிய தனது கருத்தை தெளிவுபடுத்தினார்.
“அணு ஆயுதம் பற்றிய எனது கருத்து உருவகமானது என்பது விவேகமான அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும், பயங்கரவாதத்திற்கு வலுவான பதில் நிச்சயமாக தேவைப்படுகிறது. நாஜிக்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுக்கு பயங்கரவாதம் பயனற்றது என்பதை இஸ்ரேல் தெளிவுபடுத்தும். பணயக்கைதிகளை பாதுகாப்பாக திருப்பித் தர இயன்ற அனைத்தையும் செய்ய இஸ்ரேல் அரசு உறுதிபூண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
–வேந்தன்
83 ரன்களுக்கு ஆல்-அவுட் : இந்தியாவிடம் படுதோல்வியடைந்த தென் ஆப்பிரிக்கா!
