கோவையில் புதியதாக திறக்கப்பட்ட ஜிடி நாயுடு மேம்பாலம் அருகே அதிவேகமாக சென்ற கார், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர்.
தமிழ்நாட்டின் முதலாவது மிக நீண்ட பாலம், கோவை அவிநாசி சாலையில் அண்மையில் திறக்கப்பட்டது. உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரையிலான இந்த பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இப்பாலத்துக்கு ஜிடி நாயுடு பெயர் சூட்டப்பட்டது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்ட் வின்ஸ் பகுதிக்கு ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் அதிவேகமாக சென்ற கார், இப்பாலத்தின் இறக்கத்தில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.
விபத்துக்குள்ளான காரில் இருந்த இருகூரை சேர்ந்த சேக் உசேன் , அவருடன் பயணித்த பெண் மற்றும் இளைஞர் என 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். லாரிக்கு அடியில் சிக்கிய காரில் இருந்து பெரும் போராட்டத்துக்குப் பின்னர் 3 பேரின் உடல்களை போலீசார் மீட்டனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
