அமைச்சர்கள் பெரியகருப்பன் மற்றும் சிவசங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 17) உத்தரவிட்டுள்ளது. MHC revoke Sivasankar case
கடந்த 2018-ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்று தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் அரியலூரில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக சிவசங்கர் மீது அரியலூர் போலீசார் இரண்டு வழக்குகள் பதிவு செய்தனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பிரச்சாரம் செய்ததாக சிவசங்கர் மீது தேர்தல் விதி மீறல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் அரியலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் விதிகளை மீறியதாக தற்போதைய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மீது சிவகங்கை மாவட்டம் கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி, அமைச்சர்கள் சிவசங்கர், பெரியகருப்பன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதி இளந்திரையன் முன்பாக விசாரணை நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், அமைச்சர்கள் மீதான வழக்குகளை நீதிபதி இன்று ரத்து செய்து உத்தரவிட்டார். MHC revoke Sivasankar case