பருவமழை பெய்யாததாலும், கர்நாடக மாநில அணைகளில் இருந்து உரிய தண்ணீர் திறந்து விடப்படாததாலும் மேட்டூர் அணை நீர்மட்டம் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 51 அடியாக சரிந்துள்ளது.
மேட்டூர் அணை காவிரி டெல்டா பாசனத்துக்கான முக்கிய நீர்த்தேக்கப் பகுதியாக விளங்கி வருகிறது. டெல்டா மாவட்டங்களில் 16 லட்சம் ஹெக்டேர் நிலம் மேட்டூர் அணையால் பாசன வசதி பெற்று வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படும். அதன்படி, கடந்த ஜூன் 12ஆம் தேதி டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது.

அப்போது அணையின் நீர்மட்டம் 103.35 அடியாக இருந்தது. விநாடிக்கு 10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. பின்னர், பாசன தேவைக்கு ஏற்ப நீர் திறப்பு அதிகரித்தும், குறைத்தும் திறக்கப்பட்டது.
நடப்பாண்டில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பருவமழை பெய்யாததாலும், கர்நாடக மாநில அணைகளில் இருந்து உரிய தண்ணீர் திறந்து விடப்படாததாலும் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி, நீர்வரத்து விநாடிக்கு 9,085 கன அடியாகவும், நீர் திறப்பு விநாடிக்கு 1,875 கன அடியாகவும், நீர்மட்டம் 51.11 அடியாகவும், நீர் இருப்பு 18.51 டிஎம்சியாகவும் இருந்தது.
பின்னர் பருவமழை காரணமாக அதிகரித்தது. தொடர்ந்து, 52 அடிக்கு மேல் நீர்மட்டம் இருந்து வந்தது.
பின்னர், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 51.98 அடியில் இருந்த நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் 51 அடியாக சரிந்துள்ளது.
தற்போது, அணையில் நீர் இருப்பு 19.08 டிஎம்சியில் இருந்து 18.44 டிஎம்சியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 2,031 கன அடியிலிருந்து 792 கனஅடியாகவும் குறைந்தது.
பாசனத்துக்கு அணையின் மின் நிலையம் வழியாக விநாடிக்கு 2,000 கன அடியும், சுரங்க மின் நிலையம் வழியாக 6,000 என 8,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
டெல்லியில் சமீபத்தில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர்,
“கர்நாடக அணைகளின் நீர் இருப்பு, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் குறைந்த அளவில் பதிவான மழை ஆகியவற்றை கருத்தில் கொள்கிறோம்.
அதேவேளையில் தமிழகத்தில் குறுவை சாகுபடிக்கு நீர் தேவைப்படுகிறது.4
எனவே, தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் விநாடிக்கு 5,000 கன அடி நீர் திறக்க வேண்டும்” என உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, காவிரி வாரிய ஆணையத் தலைவரை மாற்ற வலியுறுத்தி தஞ்சை ஆட்சியரை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதேபோல் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கலந்து கொண்ட விவசாயிகள், காவிரி நீர் பெற்றுத் தராத மத்திய அரசைக் கண்டித்து, மண் பானையில் தண்ணீரை நிரப்பி, தண்ணீர் காவடி எடுத்து வந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜ்
கிச்சன் கீர்த்தனா: மட்டன் மசாலா வடை!
செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை விசாரிக்க முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு!
