காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் நடப்பாண்டில் மூன்றாவது முறையாக மேட்டூர் அணை நிரம்பி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். Mettur Dam
தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதேபோல் கர்நாடகா மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியதால் பாதுகாப்பு கருதி உபரி நீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 18,000 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் காவிரியில் திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நேற்று மாலை முதல் வினாடிக்கு 18000 கன அடியில் இருந்து 22,500 கன அடியாக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை எட்டு மணி அளவில் வினாடிக்கு 22,500 கன அடியிலிருந்து வினாடிக்கு 31,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 22,500 கன அடி நீர் மற்றும் 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 8,500 கன அடி வீதம் மொத்தமாக அணையில் இருந்து 31,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நடப்பாண்டில் மூன்றாவது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
