வருது வருது… வாட்ஸ் அப்பில் மெட்ரோ ரயில் டிக்கெட்

Published On:

| By Kalai

மெட்ரோ ரயில்களில் பயணிக்க, வாட்ஸ்-அப் மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதியை  விரைவில் அறிமுகம் செய்கிறது  மெட்ரோ ரயில் நிறுவனம்.

சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் மெட்ரோ இரயில்களில்  பயணிக்க  நேரடி பயணச் சீட்டை பெற்றுக் கொள்ளும்  முறை, பயண அட்டை முறை, க்யூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்தி பயணிக்கும் முறை  என  மூன்று முறைகள் உள்ளன.

இந்நிலையில், மெட்ரோ ரயில்பயணிகளுக்கு பயணச் சீட்டை பெறுவதற்கு ஏதுவாக  வாட்ஸ்-அப்  மூலமாக டிக்கெட் எடுத்து பயணிக்கும் வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில்நிறுவனத்தின் பொதுவான கைப்பேசி எண் பயணிகளுக்கு வழங்கப்படும் இந்த எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் `ஹாய்( Hi ‘) என்று குறுந்தகவல் அனுப்பினால் ’சார்ட் போட்’ என்ற தகவல் வரும்.

அதில் டிக்கெட் எடுப்பது தொடர்பாக  தகவல்கள் இடம் பெற்றிருக்கும். அதில் பயணியின் பெயர், புறப்படும் மெட்ரோ ரயில் நிலையம், சேரும் ரயில் நிலையம் ஆகியவற்றை பதிவுசெய்து, வாட்ஸ்-அப் மூலமோ, ஜிபே மூலமோ பணம் செலுத்தினால், டிக்கெட் வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்துவிடும்.

இந்த டிக்கெட்டை  ரயில் நிலைய நுழைவாயிலில் உள்ள க்யூஆர் குறியீடு ஸ்கேனரில் காண்பித்து, மெட்ரோ ரயிலில் பயணிக்க முடியும்.

வெளியே செல்லும் இடத்தில் உள்ள க்யூஆர் குறியீடு ஸ்கேனரில் காண்பித்து வெளியே செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கலை.ரா

டாஸ்மாக்: தேங்கிக் கிடக்கும் மதுபானங்கள்

அப்பளம் போல் நொறுங்கிய பேருந்து: மெட்ரோ பணியால் நிகழ்ந்த விபத்து!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share