சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் நோக்கி சென்ற மெட்ரோ ரயில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடுவழியில் பழுதாகி நின்றது. இதனால் ரயிலில் இருந்த பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. தொடர்ச்சியாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிட்வா புயல் வலுவிழந்த நிலையிலும் சென்னையில் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் நோக்கி சென்ற மெட்ரோ ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவழியில் பழுதாகி நின்றது. மேலும் ரயிலுக்குள்ளே மின்சாரமும் தடைபட்டது.
மெட்ரோ ரயிலில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் சுரங்கத்திற்குள் மெட்ரோ ரயில் திடீரென நின்றதால் பயணிகள் கடும் அச்சத்தில் இருந்தனர். இதையடுத்து சுமார் 20 நிமிடங்கள் வரை பயணிகள் ரயில் சிக்கி தவித்தனர். பின்னர் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்ட நிலையில் மெட்ரோ ரயில் மீண்டும் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர் நீதிமன்றம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கும் இடையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர் கோளாறு சரி செய்யப்பட்டு காலை 6:20 மணிக்கு வழக்கமான செயல்பாடுகள் மீண்டும் தொடங்கின என தெரிவிக்கப்பட்டுள்ளது.
