தாம்பரம் – வேளச்சேரி இடையே புதிய மெட்ரோ இரயில் வழித்தடத்தை உருவாக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
சென்னையில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரண்டு வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது.
இரண்டாம் கட்டமாக மூன்று வழித்தடங்களில் 118.9 கிலோ மீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்கு அடுத்தபடியாக சென்னை புறநகரை இணைக்கும் வகையில் பல புதிய திட்டங்களையும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதில் பூந்தமல்லியில் புதிய விமான நிலையம் அமைய உள்ள பரந்தூர் வரையிலும், திருமங்கலத்தில் இருந்து ஆவடி வரையிலும், சிறுசேரியிலிருந்து கேளம்பாக்கம் வழியாக கிளம்பாக்கத்திற்கும்,
என புதிய வழித்தடத்திற்கான அறிவிப்பை மெட்ரோ நிர்வாகம் ஏற்கனவே அறிவித்து அதற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை பணிகளையும் நடத்தி வருகிறது.

இந்நிலையில் புதிய வழித் தடத்திற்கான திட்டம் ஒன்று ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டு இருந்தது. அதில் தாம்பரம் முதல் வேளச்சேரியை இணைக்கும் புதிய வழி தடத்திற்கான ஆய்வுகள் நடைபெற்றுள்ளது.
செயல்பாடுகளில் சவால் அதிகம் இருப்பதாலும் இரண்டாம் கட்ட பணிகளில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் இந்த திட்டம் கிடப்பில் வைக்கப்பட்டது
தற்போது இத்திட்டத்தை மறு ஆய்வு செய்யும் பணியில் மெட்ரோ நிர்வாகம் இறங்கி உள்ளது.
அதில் மாதவரம் முதல் ராமாபுரம், ஆலந்தூர் வழியாக சோழிங்கநல்லூர் வரை செல்லும் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணியான வழித்தடம் 5-ன் இடையில் தாம்பரம் – வேளச்சேரி வழித்தடம் வருவதால் எந்த இடத்தில் இணைப்பது, எத்தனை மெட்ரோ ரயில் நிலையங்களை அமைப்பது உள்ளிட்ட பல ஆலோசனையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக வேளச்சேரியில் உள்ள தனியார் வணிக வளாகம் (phoenix Mall) வரை கொண்டு செல்லவும் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.
தற்போது இந்த திட்டத்திற்கான ஆராய்ச்சி பணியில் மெட்ரோ அதிகாரிகள் ஈடுபட்டு வரும் நிலையில் ஆலோசனைக்கு பிறகே விரிவான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்கும் பணியை மெட்ரோ இரயில் நிர்வாகம் தொடங்கும் எனவும் மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக இத்திட்டத்தை செயல்படுத்தும் நிலையில் தாம்பரத்திலும் அதனை சுற்றியுள்ள பகுதியிலும் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகப் பணிகளுக்காக வேளச்சேரியை நோக்கி செல்வோருக்கு இந்த திட்டம் மிகுந்த உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கலை.ரா
குஜராத் தேர்தல்: வாக்குச் சதவிகிதம் குறைவு ஏன்?
மோர்பி பால விபத்து ட்வீட்: திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகி கைது!

Comments are closed.