தமிழகத்தில் 2026 தேர்தலுக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பின் மெட்ரோ திட்டம் நிறைவேற்றப்படும் என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், கோவையில் சுமார் 257 சதுர கிலோ மீட்டர் வர உள்ள மெட்ரோ திட்டம் குறித்து திமுக அரசு சரியாக அறிக்கை தாக்கல் செய்யவில்லை. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு என சில வரையறைகள் உள்ளன.
திமுகவும் கூட்டணி கட்சிகளும் மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துவிட்டது என்று பொய் பரப்புரை செய்து வருகிறார்கள். திமுக எப்பொழுதும் அரைகுறையாகவும் பொய் செய்திகளையும் தான் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பார்கள் .
மக்கள் தொகை, மெட்ரோ பயன்பாடுகள் குறித்து தமிழக அரசு தெளிவான விளக்கத்தை மத்திய அரசிடம் கொடுத்திருக்க வேண்டும். மத்திய அரசு வரையறை என்பது தனிப்பட்ட மாநிலங்களுக்கு மட்டும் அல்ல. அது பொதுவான பாலிசி . இதை ஒழுங்காக படிக்காமல் புரிந்து கொள்ளாமல் வேண்டுமென்றே இந்த அறிக்கையை கொடுத்துள்ளார்கள்.
அறிக்கையின் கடைசி 2 பக்கங்களை வெளியிட்டு ஐயய்யோ என்று பேசுகிறார்கள். கோவை மெட்ரோ திட்டம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பிக் பஜார், நஞ்சப்பாசாலை, பெரிய கடை வீதி உள்ளிட்ட பகுதிகள் எல்லாம் நெரிசலான பகுதிகள். இங்குள்ள கடைகளை இடிக்க வேண்டும் கடைகளை இடிக்கும் நோக்கில் திட்டங்களை போட்டு மத்திய அரசிடம் கொடுத்துள்ளார்கள் .
கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட திமுகவை வெற்றி பெற செய்யாததால் கோவை மக்களை வஞ்சிப்பதற்காகவே செயல்படுத்த முடியாத திட்ட அறிக்கையை தமிழக அரசு கொடுத்துள்ளது.
அதே சமயம் பிற மாநிலங்களுக்கு ஏன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பாட்னா, போபால் எல்லாம் சுற்றுலாவை மையப்படுத்தியும், போபால் கேப்பிட்டல் சிட்டி என்பதால் அதனை மையப்படுத்தியும் அனுமதி கேட்டு உள்ளார்கள். மேலும் அந்த நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை எல்லாம் சேர்த்து திட்ட அறிக்கை கொடுத்து அனுமதி பெற்றுள்ளார்கள்.
தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரான பிறகு கோவைக்கு மெட்ரோவை கொண்டு வருவோம் எனவும் தெரிவித்தார். 10க்கு 10 கொடுத்த கோவை மக்களுக்கு மிகச் சரியாக திட்டமிட்டு மெட்ரோ ரயில் திட்டத்தை பெற்று வருவோம் என்றார்.
